இந்தி உள்ளிட்ட வடஇந்திய திரை உலகைச் சேர்ந்தவர்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருந்து வருபவர்களை தென்னிந்திய நடிகர்கள் என்று குறிப்பிடுவது மன வருத்தம் தருவதாக நடிகை ரெஜினா கூறியுள்ளார்.
இவ்வாறு முத்திரை குத்தாமல் பொதுவாக இந்திய நடிகர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
"இவர்களால் தென்னிந்திய நடிகர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் படங்கள், தற்போது அனைத்து மொழிகளிலும் வெளியாகின்றன. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர்கள், இந்தி நடிகர்கள் என்று பிரித்து பார்க்கும் நிலைமை இருக்காது.
"எனினும் இப்போதே வடஇந்தியாவில் உள்ள கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தென்னிந்திய நடிகர்கள் என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வதைக் கேட்க முடிகிறது. அப்படிப் பேசக்கூடாது என்று அவர்களைக் கடுமையாக கண்டிக்கவும் தோன்றுகிறது," என்கிறார் ரெஜினா. இவர் தற்போது இணையத்தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.

