"கடந்த முப்பது ஆண்டுகளாக நானும் மற்றவர்களைப் போல் வாழ்க்கையில் பல்வேறு மோசமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன்," என்கிறார் சமந்தா.
இந்தக் காலக்கட்டத்தில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமந்தா திரையுலகில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதையடுத்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
"இந்த 12 ஆண்டு கால நினைவுகளும் 'லைட்ஸ்', 'கேமரா', 'ஆக்ஷன்' என்று ஒப்பற்ற தருணங்களைச் சுற்றி உள்ளன. இது ஆசீர்வதிக்கப்பட்ட பயணம்.
"உலகின் சிறந்த, நேர்மையான ரசிகர்களை பெற்றதற்காக நான் நன்றியுடன் இருப்பேன்," என்று தெரிவித்துள்ளார் சமந்தா.
மேலும் தமது விவாகரத்து குறித்தும் மறைமுகமாக அவர் சில வரிகளைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமிட்டுள்ளனர்.
"கடந்த முப்பது ஆண்டுகளாக நானும் மற்றவர்களைப்போல் தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளேன். ஏன், மரணத்தை எதிர்கொண்டு இருக்கிறேன். எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்தது.
"என்னிடம் இருந்த பணம் பறிபோனது. எனது குடும்பம் சிதைந்து இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளில் இருந்து மீண்டெழுந்து, வாழ்க்கையின் அடுத்த செங்கலை எடுத்து வைத்தேன்.
"எது நடந்தாலும் சரி, உங்கள் முன்னால் இன்னொரு செங்கல் இருக்கிறது. நீங்கள் எழுந்து நடக்கப் போகிறீர்களா அல்லது விழுந்துகிடக்கப் போகிறீர்களா என்பதுதான் உங்கள் முன் இருக்கும் கேள்வி," என்று தமது சமூக ஊடகப் பதிவில் சமந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் எழுதியுள்ள சுயசரிதையில் இருந்து சில வாசகங்களை மேற்கோள் காட்டியுள்ள அவர், தமது திரைப்பயணம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கில் உருவாகி வரும் சாகுந்தலம், ஃபிலிப் ஜான் இயக்கும் இந்திப் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் சமந்தா.
தமிழில் அவர் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு' காதல் விரைவில் திரைகாண உள்ளது.
இவர் ஆற்றிய சமூகப் பணிகளைப் பாராட்டும் விதமாக தெலுங்கானா அரசு சிறப்பு விருது அளித்து கௌரவித்துள்ளது.
இதுபோன்ற பாராட்டுகளும் அங்கீகாரமும் தொடர்ந்து இத்தகைய பணிகளில் ஈடுபடுவதற்கான உத்வேகத்தை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் 'சமந்தாவின் 12 ஆண்டுகள்' என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதற்காகவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.