அண்மைக் காலமாக தென்னிந்தியத் திரையுலகில் தயாரிக்கப்படும் புதுப்படங்களை விளம்பரப்படுத்தும்போது, 'இது அகில இந்தியப் படம்', 'அகில இந்திய வெளியீடு' என்று குறிப்பிடுகின்றனர்.
அதாவது, ஒரு மொழியில் மட்டும் படம் எடுக்காமல், குறைந்த பட்சம் இரண்டு மொழிகளில் நேரடியாக ஒரு படத்தை உருவாக்கி, அதை நாடு முழுவதும் வெளியிடும் புது பழக்கம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ஒரு தமிழ் அல்லது தெலுங்குப் படத்தின் குறைந்தபட்ச வசூல் நூறு கோடியைக் கடந்துவிட்டால் அது வெற்றிப்படம் எனக் கருதப்படுகிறது. ஆனால், ஓரளவுக்கு மேல் இந்த வசூல் கூடுவதில்லை.
இந்நிலையில், அதிகம் லாபம் ஈட்டுவதற்கான வழியைக் கோடம்பாக்கத்து நாயகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் காட்டியுள்ளது தெலுங்குத் திரையுலகம். அங்கு அண்மைக்காலமாக தயாரிக்கப்படும் பெரிய நடிகர்களின் படங்கள் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் தயாராகின்றன.
இதனால் இந்தி திரைப்படச் சந்தையிலும் இந்தப் படங்கள் நல்ல விலைக்கு வாங்கப்படுகின்றன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
"ஆனால், ஒரு தெலுங்குப் படத்தில் ஒரு வட இந்திய நாயகியையும் இந்தி வில்லனையும் களமிறக்கும்போது இயல்பாகவே அந்தப் படத்துக்கு பாலிவுட் சந்தையிலும் இடம் கிடைக்கும்.
"மேலும், மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் அல்ல என்பதையும் விளம்பரம் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்துகிறார்கள். தவிர, 200 கோடி ரூபாய் போல் செலவிட்டு, பிரம்மாண்ட படைப்பாக மாற்றுகிறார்கள்.
"ஒரே சமயத்தில் பல மொழிகளில் வெளியிடுவதன் மூலம் பெரும் லாபம் கிடைக்கிறது. இதுதான் தெலுங்குப் படங்களின் வசூல் சாதனைக்கு காரணம். தமிழ்த் திரையுலமும் இதைப் பின்பற்ற வேண்டும்," என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
இவர் குறிப்பிடும் வழிமுறையைப் பின்பற்றித்தான் தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அகில இந்தியப் படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கின்றனர்.
தமிழில் முதன்மை நாயகனாக நடிக்கும் தனுஷ், இந்தியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். விஜய்யும் இந்தப் பட்டியலில் தற்போது இணைகிறார். விஜய் சேதுபதி ஏற்கெனவே பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
"விஜய், அஜித் போன்றவர்களின் படங்கள் இந்தியா முழுவதும் வெளியிடுவதற்கு ஏற்றவைதான். எனினும், அவற்றை உருவாக்கும் விதம் மாற வேண்டும். பிறமொழி நடிகர்கள், படத்தின் பட்ஜெட், கதை அமைப்பு ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்யும்போது அனைத்து மொழி ரசிகர்களையும் கவர முடியும். மேலும் விளம்பரமும் முக்கியம்," என்கிறார் தனஞ்செயன்.

