காலஞ்சென்ற இயக்குநரும் நடிகருமான ராஜசேகரின் வீடு ஏலத்துக்கு வந்துள்ளது. வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதால், தமக்கு திரைஉலகத்தினர் உதவ வேண்டும் என ராஜசேகரின் மனைவி தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 1980களில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் ராஜசேகர். 'நிழல்கள்' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஒலித்த 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாடலுக்கு திரையில் தோன்றிய நடிகர் இவர்தான்.
இவரும் ராபர்ட் என்பவரும் இணைந்து படங்கள் இயக்கி உள்ளனர். பின்னர் ராஜசேகர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். எனினும் இத்தகைய வாய்ப்புகள் மூலம் அவர் அதிகம் சம்பாதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ராஜசேகர், தாரா தம்பதியர்க்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் சென்னையில் எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என விரும்பியுள்ளார் ராஜசேகர்.
"எப்படியோ போராடி வடபழனி பகுதியில் ஒரு வீடு வாங்கினோம். அதற்காக வங்கியில் கடன் பெற்றார். ஆனால் 2019ஆம் ஆண்டு அவர் காலமானதும் வங்கிக் கடனுக்கான தவணையைச் செலுத்த முடியவில்லை.
"யாருடைய துணையும் இன்றி தனியாக வசித்துவரும் நிலையில், சொந்த வீடு மூலம் கிடைக்கும் வாடகைப் பணத்தில்தான் நான் ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
"கடன் தவணைகளைச் செலுத்தாததால் அந்த வீடும் இப்போது ஏலத்துக்கு வர உள்ளது. வீடு கைவிட்டுப் போனால் அடுத்த மாதத்தில் இருந்து சாப்பிடக்கூட வழியின்றிப் போகும்," என்கிறார் தாரா.

