"என் மனைவி என் மீது காட்டும் அன்பிற்கு முன்னால் நான் செய்யும் அனைத்தும் தூசியாகிவிடுகிறது," என்கிறார் விஜய் சேதுபதி.
'நான் உன்னை நேசிக்கிறேன்' என்ற மூன்று வார்த்தைகள் அந்த அன்பை எவ்வாறு அடக்க முடியும் என கேள்வியும் எழுப்புகிறார்.
"என் மனைவி, குழந்தைகளிடம் நான் சொல்லும் 'ஐ லவ் யூ' என்ற சொற்க ளுக்குப் பின்னால் ஐம்பது அறுபது பக்க உணர்வுகள் இருக்கின்றன.
"அப்படித்தான் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பையும் அதற்கு ஈடாகக் கருதுகிறேன்.
"நான் அதிகம் வாசித்ததில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவர் பேசினால் அதனுள் என்னவெல்லாம் இருக்கிறது என்று அதைப் பற்றி நான் வெகு நேரம் யோசிப்பதுண்டு. நான் மனிதர்களை மலைகள் போல பார்க்கிறேன்.
"இயற்கை படைத்த மலைகளிடம் நீங்கள் பேசும்போது உங்களிடம் அது மீண்டும் எதிரொலிக்கிறது அல்லவா. அதைப்போலத்தான் இரு நபர்கள் பேசிக்கொள்ளும்போது தங்களின் கருத்துகளை ஒவ்வொருவரும் எதிரொலித்துக்கொள்கிறார்கள்.
"ஒரு சிலையை வடித்துவிட்டு அதை நாம் அழகு என்கிறோம். இயற்கையான மலையை உருவமற்றது என்கிறோம். நம்மால் அந்த உருவத்தை வடிக்க இயலுமா?
"நாம் விவசாயம் செய்வதால் இயற்கையான காடுகளை ஒழுங்கற்றது என்கிறோம். ஆனால் அவை ஒழுங்குடன்தான் இருக்கின்றன. அதை யாரும் கவனிப்பதில்லை. அப்படிச் சொல்வதற்கு நாம் யார். வேற்று மொழியில் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாமல் அதை தவறு என்று சொல்வது போன்றது இது," என்கிறார் விஜய் சேதுபதி.
"சும்மா இருந்தால் போர் அடிக்கிறது என்கிறார்கள். ஒரு மரத்தை வெறுமனே வேடிக்கை பாருங்களேன். அப்படிச் செய்தால் நம்மை வெட்டிப் பயல் என்பார்கள். ஆனால் அது வெட்டிச் செயல் அல்ல. 'கடைசி விவசாயி' திரைப்படமும் அப்படிப்பட்ட கதைதான். ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோசமாக இருக்கும்," என்கிறார் விஜய் சேதுபதி.

