சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அண்மையில் உக்ரேன் சென்ற படக்குழுவினர் அடித்துப் பிடித்துக்கொண்டு ஊர் திரும்பியுள்ளனர்.
உக்ரேனில் நிலவிய போர்ப்பதற்றம் காரணமாக ஊர் திரும்பியதாகவும் உக்ரேனில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் பீதியை உணர்ந்ததாகவும் சொல்கிறார் அந்தப் படத்தின் கதாநாயகி ஊர்வசி ரௌடேலா.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வரை உக்ரேனில்தான் இருந்தாராம். அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்தைய நாளே நாடு திரும்பிவிட்டார்.
"நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வந்தது.
"ஆனால், நாங்கள் இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே கருத்தில்கொண்டு திட்டமிட்டோம்.
"உக்ரேனில் நான் தரையிறங்கிய நிமிடத்தில் இருந்தே எனது சகோதரர் பயப்படத் தொடங்கிவிட்டார். என் அப்பாவும் வேறு வேலையாக அங்கு வந்திருந்தார்.
"பயத்தையும் மீறி என் அப்பா அங்கிருந்ததால் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்ந்தேன்.
"படப்பிடிப்புக்கு மத்தியில் உக்ரேன் பிரதமரைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால் போர்ப்பதற்றம் அதிகரித்ததால் அவரைச் சந்திக்கவில்லை.
"உக்ரேனிய இசைக்கலைஞர் மோனடிக்குடன் இணைந்து சில பணிகளைச் செய்ய திட்டமிட்டிருந்தோம். அதுவும் நடக்கவில்லை," என்கிறார் ஊர்வசி.
உக்ரேனில் நிலைமை சீரடைய வேண்டும் என தாம் மனதாரப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிடுபவர், தாம் இன்னும் அச்சத்தில் இருந்து மீளவில்லை என்கிறார்.
உக்ரேனில் ஊர்வசிக்கு நிறைய நண்பர்களும் உறவினர்களும் உள்ளனராம். அவர்களுடைய பாதுகாப்பை நினைத்து கவலைப்படுகிறார்.
"அங்கு நிலைமை எப்படி உள்ளது எனத் தொடர்ந்து விசாரித்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் கைபேசி மூலம் பேசுகிறேன்.
"என் மனதில் உள்ள பயமும் பதற்ற உணர்வும் மறைய நீண்ட காலமாகும்.
"எந்தத் தாயும் போரில் இழப்பதற்காகாகப் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில்லை. போர் எதற்கும் விடையாகாது. பாதிக்கப்படுகிற குடும்பங்களைப் பற்றி யோசிக்கும்போது இந்தப் போரினால் எந்தப் பயனும் இல்லை," என்கிறார் ஊர்வசி.
27 வயதாகும் இவர், தமிழ்ப் படத்தில் நடிப்பது தமக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார். இதற்காக தமிழில் பேச கற்றுக்கொண்டாராம்.
"இப்போது பிறர் தமிழில் பேசுவதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. பதிலுக்கு எனக்குத் தெரிந்த தமிழை வைத்து அவர்களுக்குப் பதில் அளிக்கிறேன்.
"தொடர்ந்து தமிழில் பேசினால் அது என் வசப்படும் என உறுதியாக நம்புகிறேன்.
"நான் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியீடு காண்பதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன்.
"இதில் உயிரி தொழில்நுட்ப ஆய்வாளராக நடிப்பது புது அனுபவமாக உள்ளது. மிக விரைவில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்கிறார் ஊர்வசி.
சென்னையில் படப்பிடிப்பு என்றதும் அங்கு எந்தெந்த இடங்களுக்குச் செல்லவேண்டும் என்பது குறித்து தன் தோழிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாராம்.
சென்னைவாசிகளிடம் நாம் நட்பாகப் பேசினால், உடனே நம் நட்பு வட்டத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்கிறார் ஊர்வசி.

