ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
மலையாளத்தில் பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த 'தியான்' படத்தை இயக்கிய ஜியன் கிருஷ்ணகுமார், இந்தப் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெற்றியை அடுத்து, ஆர்.ஜே.பாலாஜியை நாயகனாக ஒப்பந்தம் செய்ய சில இயக்குநர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால், தனக்கேற்ற கதையைத் தேர்வு செய்வதில் அவர் கவனமாக உள்ளார்.
இந்நிலையில், 'படாய் ஹோ' படத்தின் தமிழ் மறுபதிப்பான 'வீட்டுல விசேஷங்க' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் ஜோடி சேர்ந்திருப்பவர் அபர்ணா பாலமுரளி. போனி கபூர் தயாரித்துள்ளார்.
இதையடுத்து, நடிகர் கார்த்தியின் நண்பரான லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் படத்திலும் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதில்தான் ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
படத்தில் இன்னொரு நாயகியும் உள்ளாராம். அது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. வரும் 23ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், தலைப்பும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அடுத்தடுத்து வெற்றிப்படங்களை அளித்து வருவதால் ஆர்.ஜே.பாலாஜிக்கு கோடம்பாக்கத்தில் மவுசு அதிகரித்துள்ளது. நாயக னாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று தாம் முடிவு செய்யவில்லை என்றும் கதைக்கேற்ற நாயகனாக இருக்க மட்டுமே முயற்சிப்பேன் என்றும் கூறுகிறார் பாலாஜி.
, :

