நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
வடிவேலுவுக்கே உரிய பல்வேறு நகைச்சுவை அம்சங்களை இந்தப் படத்தில் எதிர்பார்க்கலாம் என்கிறார் இயக்குநர் சுராஜ்.
மைசூர் அரண்மனையில் பதினைந்து நாள்கள் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். காட்சிகளைப் படமாக்கியபோது வடிவேலு பேசிய வசனங்களைக் கேட்டு, ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிரித்துக்கொண்டே இருந்தனராம்.
"வடிவேலுவைப் பொறுத்தவரை காட்சியைப் படமாக்கும்போதே திடீரென ஏதாவது ஒரு வசனத்தைப் பேசுவார். மிக இயல்பாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.
"அவரிடம் அந்தத் திறமை இருக்கும்வரை யாராலும் அசைக்க முடியாது. நானும் பல நகைச்சுவைப் படங்களை இயக்கி உள்ளேன். வடிவேலுவுடன் இணைந்து பணியாற்றும்போது எனது வேலையில் பாதி குறைந்துவிடும்," எனப் பாராட்டுகிறார் சுராஜ்.
மைசூரில் 20 நாள்களுக்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனராம். ஆனால் இரண்டு வாரங்களிலேயே வேலை முடித்துவிட்டனர். இதையடுத்து மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறும். படத்தின் உச்சக்கட்ட காட்சிகளை அங்குதான் படமாக்குகின்றனர். தாய்லாந்துக்கு அடுத்தபடியாக சென்னையில் மேலும் பத்து நாள்கள் படப்பிடிப்பை நடத்தினால் மொத்தம் படமும் முடிந்துவிடுமாம்.

