ஒவ்வொரு படத்திலும் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான கதாபாத்திரங்கள் அமையாது என்கிறார் அனகா.
'டிக்கிலோனா' படம் மூலம் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த இந்த இளம் நாயகி, தற்போது தமிழ், மலையாளப் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
'நட்பே துணை' படத்தில் இடம்பெற்ற 'பேர் வெச்சாலும்' பாடலுக்கு அனகா ஆடிய நடனம் மொத்த இளையர் கூட்டத்திடமும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது.
"எனது நடனம் சிறப்பாக இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். நான் முறைப்படி நடனம் கற்றுள்ளேன். நடனம் என்பது என் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.
"நடனம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நான் நடனமாடியுள்ள பாடல்களை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர் என்பதைவிட மிகச்சிறந்த பாராட்டு இருக்க முடியாது," என்று சொல்லும் அனகா, தற்போது மலையாளத்தில் 'பீஷ்ம பர்வம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
இரண்டு நாயகிகள் உள்ள கதைகளையும் ஏற்கத் தயாராக இருப்பவர், ஒரே படத்தில் நிறைய நடிகர், நடிகையருடன் நடிப்பதிலும் ஆர்வமாக உள்ளார்.
"'பீஷ்ம பர்வம்' படத்தில் மம்முட்டி, நதியா ஆகியோருடன் நடித்த அனுபவம் அலாதியானது. அவர்களால் எப்படி பெரிய நட்சத்திரங்களாக உருவெடுக்க முடிந்தது என்பதை அருகில் இருந்து கவனிக்கும்போதுதான் புரிகிறது.
"ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் மெனக்கெடுவதும் அர்ப்பணிப்புடன் நடிப்பதும் பிரமிக்க வைக்கிறது. அனுபவ நடிகர்களை அருகில் இருந்து கவனித்தாலே போதும், நமக்கும் நடிப்பு வந்துவிடும்," என்கிறார் அனகா.
கடந்த காலத்தில் சுவாரசியம் இல்லாத கதைகளும் கதாபாத்திரங்களும்தான் அதிக அளவில் தம்மைத் தேடி வந்ததாகக் குறிப்பிடுபவர், பிறருடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் தேவையற்ற பழக்கமும் இருந்ததாகச் சொல்கிறார்.
"ஆனால் அனுபவ நடிகர்கள் இதற்கு நேர்மாறாக உள்ளதைக் கவனித்தேன். தங்களை யாருடனும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. மேலும் வெற்றியும் நட்சத்திரத் தகுதியும் ஒரே இரவில் நமக்குக் கிடைத்துவிடாது. பல ஆண்டுகள் கடுமையாக உழைத்த பிறகு, அதற்கான பரிசாக அமைவதுதான் வெற்றி. இந்த ரகசியத்தைப் இப்போது புரிந்துகொண்டுள்ளேன்.
"கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் நான் தயார். ஏனெனில் ஒவ்வொரு படத்திலும் நமக்குப் பிடித்தமான, நம் திறமைக்கேற்ற கதைகளும் கதாபாத்திரங்களும் அமையாது. எனினும் கவர்ச்சிப் பொம்மையாக திரையில் தோன்ற வேண்டும் என்றால், நல்ல படக்குழுவும் நல்ல சம்பளமும் வேண்டும் என எதிர்பார்ப்பேன்.
"மேலும் எந்தவொரு படமாக இருந்தாலும் அதில் ரசிகர்களைக் கவரக்கூடிய சில அம்சங்களேனும் இருக்க வேண்டும். அல்லது பெரிய நடிகரின் படமாக இருந்தால் நல்லது. அப்போது எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றாலும் கவலைப்படமாட்டேன். ஏனெனில், அத்தகைய படங்கள் நம்மை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்.
"மற்றவர்களைப் போல் எனக்கும் விருதுகள், சவாலான பாத்திரங்கள் ஆகியவற்றின் மீது விருப்பம் உண்டு. எனினும் எதற்காகவும் அவசரப்படமாட்டேன். எல்லாம் தன்னால் அமையும் என நம்புகிறேன்," என்கிறார் அனகா.
, :

