எந்தவொரு கட்டத்திலும் பெரிய நட்சத்திர நடிகராக வேண்டும் என்று தாம் விரும்பியதில்லை என்கிறார் ஆதி.
தமிழ்த் திரையுலகில் கட்டுடல் கொண்ட நாயகர்களில் இவரும் ஒருவர். 'சிக்ஸ் பேக்ஸ்' உடற்கட்டைப் பெற விரும்பும் தென்னிந்திய நாயகர்களும் நாயகிகளும் முதலில் ஆதியிடம் ஆலோசனை கேட்பதுதான் வழக்கம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. மனிதர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதும் தெரியாத நிலையில், 'நான் எங்கும் போகவில்லை, நான்கைந்து படங்களில் நடித்து வருகிறேன்' என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் ஆதி.
'பார்ட்னர்' என்ற நகைச்சுவைப் படத்தில் ஹன்சிகாவுடன் நடித்துள்ளாராம். அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில் 'தி வாரியர்' படத்தில் வில்லனாகத் தோன்றுகிறார்.
இதையடுத்து, சுசீந்திரன் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகும் 'ஷிவடு' படத்தில் ஆதிதான் நாயகன். இதைத்தவிர, தமிழில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் காதலிப்பதாக வெளிவந்த தகவல் குறித்த கேள்விகளை ஆதி வரவேற்பது இல்லை. தனிப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசுவதை தவிர்க்கிறார்.
"என் தொழிலே கதை கேட்பதுதான். தினமும் கதை கேட்கிறேன். படப்பிடிப்பு என்பது எனக்குப் பிடித்தமான விஷயம். எனக்குப் பிடித்தமான கதைகள் படமாகும்போதும் அவை வெற்றிபெறும் போதும் உற்சாகமாக உணர்கிறேன். படங்கள் தோல்வி அடையும்போது அவற்றில் இருந்து பாடம் கற்கிறேன்," என்கிறார் ஆதி.
கொரோனா நெருக்கடியால் உலக மக்கள் அனைவருக்குமே இரண்டு ஆண்டுகள் வீணாகிவிட்டதாகக் குறிப்பிடுபவர், தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்கிறார்.
"அதைத் தவிர மற்ற நாள்களில் நானும் வழக்கம்போல் என் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு படத்துக்கும் இடையே நான் அதிக இடைவெளி விடுவதாக சிலர் விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
"அவர்களின் அறிவுரைப்படி அதிக படங்களில் நடிக்க முயற்சி செய்து நான்கு படங்களை ஒப்புக்கொண்டபோது தான் கொரோனா குறுக்கிட்டது," என்கிறார் ஆதி.
அவர் குறிப்பிடும் நான்கு படங்களில் ஒரு படம் முடிந்து வெளியீடுக்காக காத்திருந்தது. மற்றொரு படம் 60 விழுக்காடும் இன்னொன்று 80 விழுக்காடும் நிறைவடைந்த நிலையில்தான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் திரையுலகமே முடங்கிப்போனதாகக் குறிப்பிடுபவர், அந்தப் படங்கள் அனைத்தும் இப்போது அடுத்தடுத்து வெளியாகி வருவதாகச் சொல்கிறார்.
"தெலுங்கில் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்படுவதும் சரியல்ல. நான் எந்த மொழிப் படம் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. ஒரு படம் இரு வெவ்வேறு மொழிகளில் வெளியாவது தயாரிப்பாளருக்குத்தான் லாபம் தரும்.
"என்னிடம் கதை கூற வரும் இயக்குநரும் தயாரிப்பாளரும் நான் கால்ஷீட் ஒதுக்கும் முன்பே இரு மொழிகளில் வெளியிடலாமா? என்றுதான் கேட்கிறார்கள்.
"எனக்கு இதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. படத்தின் வசூல் அதிகரிக்க இதுபோன்ற முயற்சிகள் உதவும்.
"படப்பிடிப்பின்போதே இரு மொழிகளுக்கும் அடுத்தடுத்து வெவ்வேறு வசனங்களைப் பேசி பதிவு செய்துவிடுவோம். எனவே, ஆதி கதைக்குத்தான் முன்னுரிமை தருவேனே தவிர, எந்த மொழி என்பதை ஒரு கலைஞனாக நான் பொருட்படுத்துவதில்லை," என்கிறார் ஆதி.
நாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் நல்ல நடிகர் என்று பெயர் வாங்கியுள்ளதை பெருமையாக கருதுவதாகக் குறிப்பிடுபவர், எப்போதும் நடப்பவை எல்லாம் நல்லதற்கே எனும் நேர்மறை சிந்தனையுடன்தான் தாம் செயல்படுவதாகக் கூறுகிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான, 'க்ளாப்' படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
"ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்க எனக்கு விருப்பம் இல்லை. 'மிருகம்' படத்தில் நடித்ததும் முரட்டுத்தனமான பாத்திரங்கள் மட்டுமே தேடி வந்தன. அதேபோல் 'ஈரம்' படம் முடிந்ததும் காவல் அதிகாரி கதைகளாகத் தேடி வந்தன.
"நாம் ஒரே மாதிரி நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் உச்ச நட்சத்திரங்கள்கூட, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேடுகிறார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
"அதனால்தான் நாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. மனதுக்குப் பிடித்த பாத்திரங்கள் என்றால் தயங்காமல் நடிப்பேன்," என்கிறார் ஆதி.
சம்பள விஷயத்தில் கறார் காட்டாத நடிகர் என்ற நல்ல பெயரையும் வாங்கியுள்ள இவர், தன் படங்களை விநியோகம் செய்வதிலும் தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருப்பதாகப் பாராட்டப்படுகிறார்.

