எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ள படம் 'கள்ளன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில், படத்தின் நாயகன் கரு.பழனியப்பன் பங்கேற்கவில்லை. இது சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் சீனு ராமசாமி, கதாநாயகனாக உள்ளவர் தாம் நடித்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்காதது சரியல்ல என்றார்.
"இந்தப் படத்தின் கதாநாயகன் இயக்குநர் கரு.பழனியப்பன் விழாவுக்கு வந்திருக்கலாம்.
"அவருக்கும் இப்படத்தின் இயக்குநர் சந்திராவுக்கும் இடையே முரண்பாடுகள், பிரச்சினைகள் இருந்தாலும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்க வேண்டும்.
"இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது கரு.பழனியப்பன் அரசியலில் இல்லை. இப்போது பெரிய கட்சியில் இருக்கிறார். ஒருவேளை தமிழக முதல்வர் மகனும் நடிகருமான உதயநிதியை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் கரு.பழனியப்பன் வந்திருப்பார்," என்றார் சீனுராமசாமி.
இதையடுத்துப் பேசிய இயக்குநர் ராஜு முருகன், 'கள்ளன்' மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.
"தயாரிப்பாளர் இதைச் சிறிய படம் என்று சொன்னார். ஆனால் வெளியீடு கண்ட பிறகு இது பெரிய படமாக மாறும். சினிமா மீது பெண் எழுத்தாளரும் இயக்குநருமான சந்திராவுக்கு பெரிய கனவு உள்ளது.
"பெண் இயக்குநர்களைப் பொது புத்தியில் இருந்து பார்க்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் வந்த பிறகும்கூட அந்தப் பார்வை இருக்கிறது. இதைப் படைப்புகள்தான் மாற்றும்," என்றார் ராஜு முருகன்.

