தனது உதவி இயக்குநரை சுயமரியாதை உள்ளவர் என்றும் திறமையை வெளிப்படுத்தி தன்னிடம் உதவியாளராகச் சேர்ந்ததாகவும் பாராட்டியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அவரிடம் பாராட்டு பெற்றவர் மதிமாறன். இவர் இயக்கி உள்ள படம் 'செல்ஃபி'.
இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும் வர்ஷா பொல்லம்மா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் முக்கியபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிடும் நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், இது 'நீட்' தேர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் என்றார்.
"மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப்பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக்கொண்டேன். ஒரு நல்ல படைப்பைத் தரக்கூடிய ஆற்றலும் வேகமும் இருப்பது தெரிந்தது. 'ஆடுகளம்' படத்தில் உதவியாளராக மதியின் பங்கு மிகப் பெரியது.
"இப்போது 'செல்ஃபி' படத்தை 29 நாள்களில் முடித்துவிட்டான். இந்தப் படம் மூன்று மடங்கு லாபம் தரும் என்று தயாரிப்பாளர் தாணு பாராட்டியபோது பெருமையாக இருந்தது," என்றார் வெற்றிமாறன்.

