பன்னீர்செல்வம் இயக்கியுள்ள 'தீக்குள் விரலை விட்டாய்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தீப்ஷிகா. இதையடுத்து விக்ரம் பிரபுவுடன் புதுப்படம் ஒன்றில் இணைந்துள்ளார்.
தீப்ஷிகா திரைத்துறையில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. குறுகிய காலத்துக்குள் தமிழிலும் தெலுங்கிலும் தலா மூன்று படங்களில் நடித்துவிட்டாராம்.
இந்த இளம் நாயகியின் சொந்த ஊர் சென்னை. பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இளங்கலை பட்டப்படிப்பை முடித்த கையோடு சினிமா துறைக்கு வந்துவிட்டார். தீப்ஷிகாவின் தந்தை தொழிலதிபர். சிறு வயது முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்பதுதான் இவரது ஆசை. பெற்றோர் இதற்கு தடை விதிக்கவில்லை. மாறாக இருவரும் மகளை ஊக்கப்படுத்தி உள்ளனர்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, 'ரேனிகுண்டா', 'கருப்பன்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் பன்னீர்செல்வம் தனது படத்துக்கு புது கதாநாயகியைத் தேடுவதாகக் கேள்விப்பட்டாராம் தீப்ஷிகா. சும்மா முயற்சி செய்வோம் என்று முடிவெடுத்து, நாயகிக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றுள்ளார்.
"நூற்றுக்கும் அதிகமான இளம்பெண்கள் அந்த தேர்வுக்கு வந்திருந்தனர். என்னைவிட அழகான பெண்களும் இருந்தனர். ஆனால், இயக்குநர் பன்னீர்செல்வம், 'உனக்கு நடிக்கவும் தெரிகிறது. அதனால் நீதான் எனது படத்தின் நாயகி' என்று சொல்லி என்னைத் தேர்ந்தெடுத்தார்.
"நாற்பதே நாள்களில் மொத்தப் படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. அவருடைய மகன் அருண் தான் நாயகன். அருண் இதற்கு முன் 'ஐஸ்வர்யா முருகன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தீக்குள் விரலை விட்டாய்' அவருக்கு இரண்டாவது படம்," என்று சொல்லும் தீப்ஷிகா, விக்ரம் பிரபுவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார்.
காலஞ்சென்ற சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற பந்தா ஏதும் இல்லாமல் மிகவும் எளிமையாகப் பேசிப் பழகுகிறாராம் விக்ரம் பிரபு.
"முதல்நாள் படப்பிடிப்பில் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தியபோது, "கனவுத்தொழிற்சாலைக்கு வருக," என்று குறிப்பிட்டு வரவேற்றார். பின்னர் என் நடிப்பைப் பார்த்துவிட்டு, "நல்ல திறமையுடன் இருக்கிறீர்கள், வாழ்த்துகள். இந்தப் படத்தில் உங்களுடைய கதாபாத்திரம்தான் திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். இயக்குநர் இதுகுறித்து ஏதும் சொன்னாரா? என்று அக்கறையுடன் விசாரித்தார். இன்னொரு கதாபாத்திரத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அப்படத்தின் கதாநாயகனே இப்படிக் குறிப்பிட பெரிய மனது வேண்டும்," என்று விக்ரம் பிரபுவைப் பாராட்டுகிறார் தீப்ஷிகா.
"இதுவரை நடந்துள்ள அனைத்துக்கும் சேர்த்து கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சினிமாவை சிறு வயது முதல் நேசித்து இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ, அடுத்தடுத்து என்னை படங்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். என்னைப் பரிந்துரை செய்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக கடந்த ஒன்றைரை ஆண்டுகளில் ஐந்து படங்களில் நடித்து முடித்துவிட்டேன்.
"விக்ரம் பிரபு படம் முடிவடைந்ததும், பிரபல தெலுங்கு நாயகன் நவீன் சந்திராவுக்கு ஜோடியாக 'தேஜாவுய்' என்கிற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்துவிட்டேன். அரவிந்த் சீனிவாசன் இயக்கி இருக்கிறார்.
"இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ரவிதேஜா தயாரிப்பிலும் மற்றொரு பெரிய தெலுங்குப் பட நிறுவனத்துக்கும் ஒப்பந்தமாகி, இரண்டு படங்களிலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறேன்.
"மூன்றாவது தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளேன்," என்று உற்சாகத்துள்ளலுடன் பேசும் தீப்ஷிகா, கவிஞர் வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' இசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிலும் நடித்துள்ளார்.
"அந்த இசைத்தொகுப்பில் இடம்பெறும் 'கேசாதிபாதம்' என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நான் நடித்துள்ளேன். ஒரு பெண்ணின் தலை முதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து.
"படப்பிடிப்பு முடிவடைந்த சில நாள்களுக்குப் பின்னர் அவரே தொடர்புகொண்டு பேசி, 'உங்கள் நடிப்பும் நடனமும் அந்தப் பாடலுக்கு உயிர்கொடுத்துவிட்டதம்மா... வாழ்த்துகள்' என்று வாழ்த்தியதை வாழ்நாள் முழுதும் மறக்கவே இயலாது," என்கிறார் தீப்ஷிகா.

