நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து தொடங்கி உள்ள 'ரவுடி பிக்சர்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தப் பெயர் ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது என சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
"ரவுடிகளையும் ரவுடித்தனத்தையும் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இப்படிப்பட்ட பெயரை வைத்தது சரியல்ல. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கண்ணன் தமது புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. எனவே, தங்கள் சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ரவுடி பிக்சர்ஸ்' என இருவரும் பெயர் சூட்டி உள்ளனர்.


