கு.கணேசன் இயக்கியுள்ள 'காதல் செய்' படத்துக்கு தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சட்டப் போராட்டத்தை தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இது கணேசனின் இரண்டாவது படம். இதற்கு முன்பு இலங்கையில் நடந்த இறுதிப்போரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினி இசைப்ரியாவின் வாழ்க்கையை 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற பெயரில் இயக்கி இருந்தார் கணேசன்.
அதை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்கப்பட்டது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு அது வெளியீடு கண்டது.
"அந்தப் படத்திற்கு பிரச்சினை செய்த அதே தணிக்கைக் குழுவினர்தான் இப்போது 'காதல் செய்' படத்தையும் பார்த்தனர். 'போர்க்களத்தில் ஒரு பூ' பட வெளியீட்டு நேரத்தில் நடந்த பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு 'காதல் செய்' படத்தையும் வெளியிடக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க காதல் படம். இந்த பிரச்சினையை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன்," என்கிறார்.
இதற்கிடையே இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் இளையராஜாவின் நகைச்சுவை பேச்சு அனைவரையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
"எதிர்கால பாரதிராஜாக்களே... நிகழ்கால பி.வாசுக்களே... எதிர்கால இளையராஜாக்களே..." என்று பேசத் தொடங்கிய அவர், பிறகு லேசாக சிரித்தபடியே, "காலகாலத்துக்கும் பாரதிராஜாக்கள், இளையராஜாக்கள் புதிது புதிதாக வருவார்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான்.
"ஒரு சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் உலகத்தில் தோன்ற வாய்ப்புள்ளதா, இல்லை," என்றார் இளையராஜா.
ஒரு படத்தை தயாரிக்க தயாரிப்பாளரும் இயக்குநரும் எவ்வளவு சிரமப்பட்டாலும் பரவாயில்லை எனக் குறிப்பிட்ட அவர், படம் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் அதனால் கஷ்டம் வரக்கூடாது என்றார்.
இதைக்கேட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜாவும் பி.வாசுவும் வாய்விட்டுச் சிரித்தனர்.
"இந்தப் படத்துக்கு 'காதல் செய்' என்று தலைப்பு வைத்திருக்கிறீர்கள். நானும் காதல் செய்யப் பார்க்கிறேன்.
"என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், எதைக் காதலிக்கணும் என்பதுல நான் ரொம்ப தெள்ளியனா இருக்கிறேன்," என்றார் இளையராஜா.

