தெலுங்குப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரெஜினா. இதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
"நல்ல நடிகை என்று பெயரெடுத்துள்ள நிலையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தேவைதானா?" என்று சிலர் அவரது சமூக ஊடகப் பக்கங்களில் கருத்து தெரிவிக்க, இனி இதுபோன்று செய்யமாட்டேன் என அறிவித்துள்ளார் ரெஜினா.
சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள ஆச்சார்யா திரைப்படத்தில் 'சாலா கஷ்டம்' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளார் ரெஜினா. இதற்காக பெரிய தொகை சம்பளமாகக் கிடைத்துள்ளது.
"ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதில் எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. ஆனால் சிரஞ்சீவி என்ற பெரிய நடிகருக்காக என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். வாய்ப்பு கிடைத்தால் அவருடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடிக்கவேண்டும் என்பது என் ஆசைகளில் முக்கியமானது. இதை முன் எப்போதோ அளித்த ஒரு பேட்டியில்கூட குறிப்பிட்டுள்ளேன்.
"அப்படி ஒரு வாய்ப்பு தேடிவந்ததும் உடனே ஒப்புக்கொண்டேன். சிரஞ்சீவியுடன் இணைந்து நடனம் ஆடுவதைவிட வேறு இனிய அனுபவம் உள்ளதா என்ன? எனினும் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவதே இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும்," என்கிறார் ரெஜினா.
இதற்கிடையே, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பதை ஆசிர்வாதமாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார். இருவரும் இந்தி இணையத்தொடரில் இணைந்து நடிக்கின்றனர்.
"சேதுபதியுடன் நடிக்கும்போது நம் திறமையும் மெருகேறும். நடிப்பில் ஒரு முதிர்ச்சி ஏற்படும். அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்," என்கிறார் ரெஜினா.
, :

