புதுவையில் இயங்கி வரும் 'வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார் அதன் நிர்வாக அறங்காவலரான இ.பா.வீரராகவன்.
ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவருக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம். கடந்த 2016ஆம் ஆண்டு வாட்ஸ் அப் குழக்களின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜய் சேதுபதிக்கு தெரிய வர, தாம் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வீரராஹவனை பங்கேற்கச் செய்ததன் மூலம் அவரது சேவை இயக்கம் மேலும் விரிவடைந்தது.
"அதுமட்டுமல்ல, வேறு பல உதவிகளையும் செய்தார் சேதுபதி. அதனால் ஆசிரியர் பணியைக் கைவிட்டு சேவை இயக்கத்தில் முழுமையாக என்னை இணைத்துக்கொண்டேன். என்னுடன் பணியாற்றும் முழுநேரப் பணியாளர்களுக்கு விஜய் சேதுபதி மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறார்.
"எங்கள் அமைப்பின் மூலம் இந்த மார்ச் மாதம் வரை 100,133 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 1,400 வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் நானூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர்.
"இதுவரை 73 சுயதொழில் முனைவர்களை உருவாக்கி உள்ளோம், 17 வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி உள்ளோம்.
"இதுகுறித்து பொதுவெளியில் பேச முற்பட்ட போதெல்லாம் விஜய் சேதுபதி என்னைத் தடுத்துவிட்டார்.
"இனி அவர் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. அவரது இந்தப் பெரிய பணி உலகத்துக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக இப்போது சொல்கிறேன்," என்கிறார் வீரராகவன்.

