திரைப்பட நடிகைகளின் வாழ்க்கை என்பது நிறைய மேடு பள்ளங்கள் நிரம்பியது என்கிறார் பிரணிதா.
மிகக் குறுகிய இடைவெளிகளில் வெற்றி, தோல்விகளைச் சந்திக்கும் நடிகைகள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் பெற்றுள்ளதாக அண்மைய சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"திரையுலக வாழ்க்கை என்பது நிலையற்றது. அது நன்கு தெரிந்திருந்தும் சினிமா வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் துணிச்சல் நடிகைகளிடம் உள்ளது.
"ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக நாங்களும் உடலை வருத்திக்கொள்கிறோம். அதிக வசதி இல்லாத இடங்களில் தங்குவது, தூங்குவது என்று இருப்போம். கௌரவம் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம். சுகாதாரமற்ற இடங்களில் கூட பணியாற்றுகிறோம்," என்று பிரணிதா கூறியுள்ளார்.
மேலும், இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் குடும்பம், தோழிகள், உறவினர்களை விட்டுவிட்டு குளிருக்கு நடுங்கியும் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் நடிகைகள் பணியாற்றுவதாக உருக்கத்துடன் பதிவிட்டுள்ள அவர், நடிகைகள் சக்திக்கு மீறி உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இவ்வளவு கஷ்டமும் கலைக்காகவும் ஒரு நல்ல வெற்றி கிடைக்காதா என்பதற்காகவும்தான். அதற்கான போராட்டம் கடினமானது," என்கிறார் பிரணிதா. 'உதயம்' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பின்னர் 'சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். இப்போது சமூக ஊடகங்களில் அதிகமாகத் தனது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.

