பல்வேறு அவமானங்களை எதிர்கொண்ட பிறகுதான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்கிறார் சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா.
குடும்பத்துடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளானதில் தனது கைக்குழந்தையின் காது பிய்ந்துவிட்டது என்றும் அப்போது தனக்கு உதவியவர்களை என்றும் மறக்க இயலாது என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"நான் கறுப்பாக இருப்பதாகப் பலர் கேலி செய்கிறார்கள். அதுகுறித்து நான் கவலைப்படுவதே இல்லை. இது என் தாய் கொடுத்த நிறம். அதை எனது பெருமையாகக் கருதுகிறேன்.
"பிறந்த எட்டாவது நாளே மகளைத் தூக்கிக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டேன். பலர் பலவிதமாக விமர்சித்ததை நான் கண்டு கொள்ளவில்லை. இது எனக்கான போராட்டம்.
"ஒருமுறை படப்பிடிப்புக்காக காரில் சென்றபோது திடீர் விபத்தில் சிக்கினோம். கார் கவிழ்ந்துவிட்டது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. குழந்தையின் அழுகை சத்தமும் கேட்கவில்லை.
"அப்போது மூன்று இளையர்கள் உதவினர். அவர்களிடம், குழந்தை எங்கே என்று தேடுமாறு கேட்டுக்கொண்டேன். அப்போது கார் இருக்கையின் கீழ்ப் பகுதியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. வெளியே எடுத்தபோது உடல் முழுவதும் ரத்தம். பிறந்து அறுபது நாளே ஆன என் மகளின் காது பிய்ந்துவிட்டது என்று சொல்லி, மயக்க மருந்து கொடுக்காமல், அவள் கதறி அழ, அழ தையல் போடப்பட்டது. அந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன்," என்கிறார் அறந்தாங்கி நிஷா.

