'மாநாடு' படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் சத்தமின்றி 'மன்மத லீலை' என்ற படத்தை முடித்துள்ளார் வெங்கட் பிரபு.
மேலும், தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.
'மன்மத லீலை' என்ன மாதிரி கதை என்று கேட்டால் தனக்கே உரிய நகைச்சுவையுடன் விவரிக்கிறார் வெங்கட் பிரபு.
"இது காதல் லீலையில் கைதேர்ந்த இளையரின் கதை. பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவமும் அண்மைய நிகழ்வு ஒன்றும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இதனால்தான் அது, அதனால்தான் இது என்கிற ரீதியில் சில சம்பவங்கள் தொடர்கின்றன.
"முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையைக் கையாள முயற்சி செய்துள்ளேன். என்னுடைய உதவி இயக்குநர் மணி எழுதிய கதை இது. கொரோனா முழு அடைப்பின்போது நான் சொன்ன சிறிய ஐடியாவை வைத்து பெரிய கதையை உருவாக்கி உள்ளார். கதை, திரைக்கதை இரண்டுக்கும் கிடைக்கும் பாராட்டுகள் அவரைத்தான் போய்ச் சேர வேண்டும்.
"இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றை அடுத்தடுத்து சொல்லிக்கொண்டிருப்போம். படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு நன்கு புரியத் தொடங்கும். அனைவருக்கும் இது புதிய அனுபவமாகவும் இருக்கும். இந்தப் படத்தில் பாடல்களே கிடையாது.
"இது திரையரங்க வெளியீட்டுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதே திட்டம்.
"திரையரங்கில் வெளிவரும்போது ஒரு பிரச்சினை ஏற்படும் என்று நினைத்தேன். சினிமா பிரபலங்கள் இந்தப் படத்தை 'மாநாடு' படத்துடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் அது சரியல்ல.
"இது குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம். 'மாநாடு' பெரும் பொருட்செலவில் பெரிய நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. எனவே, இரண்டையும் ஒப்பிடக்கூடாது.
"எனினும், திரையரங்க உரிமையாளர்கள் விடவில்லை. இது அழகான படம் என்று கூறி ஆதரவு அளிக்க முன்வந்தனர்," என்கிறார் வெங்கட் பிரபு.
அசோக்செல்வன் நாயகனாகவும் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி, 'கயல்' சந்திரன், கருணாகரன் ஆகியோரும் உள்ளனர். பிரேம்ஜி இசையமைக்கிறார்.
படம் மிக விரைவில் திரைகாண உள்ளது. வெங்கட் பிரபு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'மன்மத லீலை' படப்பிடிப்பின்போது வெங்கட் பிரபு, அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே.

