பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இது சூர்யாவுக்கு 41வது படமாகும். கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன்பு பாலா இயக்கத்தில் நடித்திருந்தார் சூர்யா.
இந்நிலையில், பாலாவுடன் மீண்டும் இணைந்துள்ள அவர், இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். "எனது வழிகாட்டியான இயக்குநர் பாலா 'ஆக்ஷன்' என்று சொல்வதற்காக காத்திருக்கிறேன். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இது மகிழ்ச்சியான நாள். இந்த நேரத்தில் அனைவரது வாழ்த்துகளும் தேவை," என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
அப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கிய முந்தைய படங்களுக்கு டாக்டர், பீஸ்ட் என ஆங்கிலத்தில்தான் தலைப்பு வைக்கப்பட்டுள் ளது. எனவே, அதே ராசியைப் பின்பற்றி ரஜினியின் படத்துக்கும் தலைப்பு வைக்க விரும்புகிறாராம் நெல்சன். ரஜினியும் இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.
தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இத்தகவலை நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு 'பவர் பாண்டி' படத்தை இயக்கி இருந்தார் தனுஷ். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியீடு கண்ட இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் தாமே அப்படத்தை தயாரிக்கவும் செய்தார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், தனுஷ் மீண்டும் படம் இயக்க தயாராகிவிட்டார் என்றும் அப்படத்தில் தானும் விஜய் தொலைக்காட்சி ராமரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்கப்போவதாகவும் கூறினார்.

