முன்னணி நடிகர், நடிகைகள் சமூக ஊடகங்களின் வழி அவ்வப்போது தாங்கள் நடிக்கும் புதுப்படங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பாடல், முன்னோட்டக் காட்சித் தொகுப்பு, வெளியீட்டுத் தேதி, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், முதல் தோற்றச் சுவரொட்டி என சீரான இடைவெளிகளில் அவர்களது பதிவுகள் இடம்பெறும்.
இதன் மூலம் படத்தின் தயாரிப்புத்தரப்புக்கு நடிகர், நடிகைகள் உதவி செய்வதாக ரசிகர்கள் நினைக்கக்கூடும். சிலர் இத்தகைய எண்ணத்துடன் இருந்தாலும், பெரும்பாலானோர் சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பதே உண்மை.
இதுபோன்ற பதிவுகளை விளம்பரமாகக் கருதி, படத்தயாரிப்புத் தரப்பு லட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுக்கிறது. எத்தனை மில்லியன் பேர் சமூக ஊடகங்களில் ஒரு பிரபலத்தை பின்தொடர்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்கள் வெளியிடும் பதிவுகளுக்கான தொகை மாறுபடுகிறது.
நடிகைகளைப் பொறுத்தவரை, திரையுலகம் சார்ந்த பதிவுகள் தவிர, அழகு சாதனப் பொருள்கள், ஆடைகள், நகைகள் குறித்த விளம்பரங்களையும் வெளியிடுகின்றனர்.
அந்த வகையில், நடிகை சமந்தா ஏராளமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரை இருபது மில்லியனுக்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களில் பின்பற்றுகின்றனர். அதனால் தனது ஒவ்வொரு பதிவுக்கும் சுமார் பத்து லட்சம் ரூபாய் பெற்று வருகிறாராம். மிக விரைவில் இதை இரட்டிப்பாக உயர்த்த அவர் முடிவு செய்துள்ளார்.
நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் அந்த வகையில் பணம் ஈட்டி வருகின்றனர்.
நயன்தாரா பொதுவாக தாம் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும்கூட தனியாக ஒரு தொகையைப் பெற்று வந்தார். இப்போது அவரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி லாபம் பார்த்து வருகிறார்.
ஒரு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ நடிகைகள் நன்றாக காசு பார்ப்பதாக கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.

