'பீஸ்ட்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் குறித்த விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள், சமூக ஊடகங்களில் தொடங்கிவிட்டன.
அந்த வகையில், 'தளபதி 66' படத்தின் நாயகி யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் ராஷ்மிகா மந்தனாதான் விஜய்யுடன் இணையப் போகிறார் என்று பரவலாகப் பேசப்பட்டது. காரணம், இந்தப் படத்தை இயக்கும் வம்சி படியப்பள்ளி, தெலுங்கில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர், எனவே, தெலுங்கில் கோலாச்சிக் கொண்டிருக்கும் ராஷ்மிகாதான் இயக்குநரின் தேர்வாக இருப்பார் என்று கூறப்பட்டது.
இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. விஜய் ஜோடியாக நடிக்கப்போவது தமன்னா என்று ஒரு தகவல் கசிந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தமன்னா கைவசம் பெரிய படங்கள் ஏதும் இல்லை.
ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துவிட்டால் வீட்டில் சும்மா இருக்க வேண்டியதுதான். அத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்பு சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்பதால் ஒன்றிரண்டு படங்களில் ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட ஒப்புக்கொண்டுள்ளார். அவரை எப்படி விஜய் படத்துக்கு தேர்வு செய்தனர்? என்பதுதான் விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எனினும், பிறகு வெளியான ஒரு தகவல் அவர்களை அமைதிப்படுத்தியுள்ளது எனலாம்.
அதாவது, கதைப்படி, விஜய்க்கு இந்தப் படத்தில் இரண்டு வேடங்களாம். அதில், திடீரென மயக்கம் போட்டு விழக்கூடிய உடல்நலக் கோளாறால் அவதிப்படுபவராக நடிக்கிறாராம். ஒருசில காட்சிகளே வரும் இந்த கதாபாத்திரத்திற்குத்தான் தமன்னா ஜோடியாக நடிப்பதாகத் தகவல்.
இந்நிலையில், புதுத்தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கிரித்தி சனோன் விஜய் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில் இருந்து இந்திக்குச் சென்று பெயர் வாங்கிய பூஜா ஹெக்டேவைப் போல் இவரும் தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட் பக்கம் சென்றவர், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகத் தகவல்.
பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த கிரித்தி சனோன், படிப்பில் கெட்டிக்காரராம். பொறியியல் பட்டதாரி. படிப்பை முடித்த கையோடு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது, அதை ஏற்க இருந்தாராம்.
அந்த நேரம் பார்த்து 'மாடலிங்' செய்யும் வாய்ப்பும் தேடி வர, அதைத் தேர்வு செய்துள்ளார் கிரித்தி. இரண்டொரு விளம்பரப் படங்களில் தலைகாட்டிய கையோடு, தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு, இந்தியில் நடிக்கக் கேட்டு சிலர் அணுக, தெலுங்கு தேசத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் மும்பைக்குப் பறந்துவிட்டார்.
கிரித்தி சனோனுக்கு இப்போது 32 வயதாகிறது. எனினும், இவருக்கென்று இளம் ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது.
சமூக ஊடகங்களில் அடிக்கடி தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு இளையர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் நாயகிகளின் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.
அதிகம் பேச மாட்டார், சம்பள விஷயத்தில் கறார் காட்ட மாட்டார் என்றெல்லாம் நற்சான்றிதழ் வாங்கியிருக்கும் கிரித்திக்கு, தமிழில் அறிமுகமாக வேண்டும் என்பதில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே மிகுந்த விருப்பம் இருந்துள்ளது.
எனினும், கொரோனா தொற்று, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் என்று எல்லாம் சேர்ந்துகொள்ள, கோடம்பாக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட முடியவில்லை.
தற்போது விஜய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு தேடி வந்திருப்பதில் உற்சாகமாக உள்ளாராம் கிரித்தி சனோன்.
எனினும், ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்பு தொடங்கும் வரை வாய் திறக்கக்கூடாது என்று கிரித்தி தரப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல்.
"தமிழ் ரசிகர்கள் திறமைக்கு ஆதரவு கொடுப்பவர்கள். அவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என விரும்புகிறேன்," என்கிறார் கிரித்தி சனோன்.

