'பீஸ்ட்' படத்தை முடித்த கையோடு ரஜினியை வைத்து இயக்கும் படத்துக்குரிய பணிகளைச் சத்தமின்றி தொடங்கிவிட்டார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
தமக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு விஜய்தான் முக்கிய காரணம் என்றும் சொல்கிறார்.
'பீஸ்ட்' படப்பிடிப்பு முடிவடையும் நேரத்தில் திடீரென ஒருநாள் என்னிடம், 'ரஜினி சார் அடுத்த படத்துக்கு கதை கேட்டு வருவதாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது?' என்று என்னிடம் கேட்டார் விஜய்.
"நான் தயக்கத்துடன் இருப்பதைப் பார்த்து, 'நீங்கள் கதையை மட்டும் உருவாக்குங்கள். எல்லாம் நல்லவிதமாக நடக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது' என்றார். அவரது அந்த நம்பிக்கைதான் என்னை உசுப்பேற்றியது.
"அதன் பிறகு ஒரு கதையைத் தயார் செய்து, ரஜினி சாரிடம் சொன்னேன். விஜய் சொன்னதுபோல் எல்லாம் நன்றாகவே நடந்தது," என்கிறார் நெல்சன்.
'பீஸ்ட்' எப்படிப்பட்ட படமாக இருக்கும்?
"விஜய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எத்தகைய எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். அவற்றை நிறைவேற்றும் வகையில் எல்லோருமே கடுமையாக உழைத்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் படமாக்கி உள்ளோம். அதேசமயம் என்னுடைய முந்தைய படங்களான 'கோலமாவு கோகிலா' அல்லது 'டாக்டர்' போன்ற சாயல் 'பீஸ்ட்' படத்தில் அறவே இருக்காது.
"இது முழுவதும் வேறு மாதிரியான படம். அடிதடிக்கும் அதிரடிக்கும் பஞ்சமே இருக்காது. படம் முழுவதும் நகைச்சுவை இருக்கும்," என்று சொல்லும் நெல்சன், சிறு வயது முதலே விஜய்யின் தீவிர ரசிகராம். எனினும் 'பீஸ்ட்' படத்தில் தனது பாணியையும் கலந்துள்ளதாகச் சொல்கிறார்.
கதாநாயகன் திடீரென நெருக்கடியான சூழலை எதிர்கொள்கிறார். அப்போது ஆபத்தில் சிக்கியுள்ள பலரை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் 'பீஸ்ட்' படத்தின் கதை.
"இந்த ஒற்றை வரி முதலில் அவருக்குப் பிடிக்க வேண்டும். அதன் பிறகு நேரில் சந்தித்து இரண்டு மணி நேர படத்துக்கான கதையை விரிவாகச் சொல்ல வேண்டும். மேலும், இந்தப் படத்தை எனது பாணியில் எடுக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன். ஆனால் இதற்கெல்லாம் விஜய் சம்மதிப்பாரா என்ற தயக்கம் இருந்தது.
"அவரோ கதையைக் கேட்டதும் ரொம்பப் பிடித்திருப்பதாகக் கூறினார். அது மட்டுமல்ல, நான் நினைத்ததைவிட அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது. இருவரது மனதுக்குள்ளும் ஒரு நட்பு ரீதியிலான அதிர்வு இருப்பதாக உணர்ந்தேன். ஒருவித நட்பான சூழல்தான் படப்பிடிப்பு முடியும் வரை இருந்தது. அதற்கு விஜய்யின் எளிமையும் நட்பான அணுகுமுறையும்தான் காரணம் என்பேன்," என்கிறார் நெல்சன்.
விஜய் இவரது பெயரைச் சுருக்கி, 'நெல்சா' என்றுதான் அழைப்பாராம். அடிக்கடி 'எல்லாம் சரியாக நடக்கிறதா?' என்றும் விசாரிப்பாராம்.
"ஒருநாள் அவருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டோம். சாதாரண பிரியாணிதான் இருந்தது. இதை வெளியிலேயே சாப்பிட்டு இருப்பேனே என்று கிண்டலடித்தேன். அவரோ, நெல்சா... வாழ்க்கை என்பது இவ்வளவுதான் என்று சிரித்தபடியே சொன்னார்.
"படப்பிடிப்பின் போதும்கூட நமக்கு அவரால் எந்தவித அழுத்தமும் ஏற்படாது. நம்மை அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக் கொள்வார். 'பீஸ்ட்' பட நினைவுகள் காலம் கடந்தும் இனிமையான அனுபவங்களாக மனதில் நிலைத்து நிற்கும்," என்கிறார் நெல்சன் திலீப்குமார்.
பூஜா ஹெக்டேவைத் தேர்வு செய்ய காரணம்?
"பீஸ்ட்' பட நாயகியைத் தேர்வு செய்யும்போது இதுவரை அவருடன் நடிக்காத ஒருவராக இருக்கவேண்டும் என்று விரும்பினோம்.
"மேலும், விஜய்யின் உயரத்துக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்ற கோணத்திலும் யோசித்தபோது பூஜா ஹெக்டே நினைவுக்கு வந்தார். அவர் கடின உழைப்பாளி. நாங்கள் எதிர்பார்த்ததுபோல் சிறப்பாக நடித்திருக்கிறார்.
"அதேபோல் இன்னொரு கதாபாத்திரத்துக்கு புதிதாக ஒருவர் தேவைப்பட்டார். அப்போது செல்வராகவன் சார் நினைவு வந்தது. அவரிடம் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார்," என்கிறார் நெல்சன்.

