நடிகர் பிரசாந்த் தன் தந்தை தியாகராஜன் வைத்துள்ள பாசமும் நம்பிக்கையும் அலாதியானது எனப் பாராட்டுகிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
அண்மையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரசாந்த். அந்த நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப் பேசினார்.
அப்போது ஏ.வெங்கடேஷ் தாம் வெளிப்படையாக சில விஷயங்களைப் பேச விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
"நான் பிரசாந்த் சாருடன் 'சாக்லெட்' என்ற ஒரு படத்தில் மட்டும்தான் பணி புரிந்தேன். ஆனால் பல படங்களில் பணிபுரிந்த அளவிற்கு எங்களிடம் நல்ல பழக்கமும் நல்ல புரிதலும் தொடர் நட்பும் உள்ளது. அன்று முதல் அவருடன் நான் தொடர்ந்து பயணம் செய்கிறேன்.
"பிரசாந்தைக் கெடுப்பதே அவரது அப்பாதான் என்று திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது. என்னிடம் பலர் நேரிலேயே கூறியுள்ளனர். இதுபற்றி பிரசாந்திடம் கேட்டபோது, அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது.
"எந்தத் தந்தையாவது தன் மகன் வாழ்க்கையைக் கெடுக்க விரும்புவாரா? அவரின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வாரா? எனக்கு என் அப்பாதான் எல்லாம். அவர் இல்லை என்றால் நான் இந்த அளவு முன்னேறி இருக்க முடியாது என்றார். அந்த நொடியே அவர் மீதான மதிப்பு மேலும் அதிகரித்தது," என்றார் வெங்கடேஷ்.