கடந்த ஆண்டு இந்தியத் திரை உலகில் தென்னிந்தியப் படங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளன.
கடந்த ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த பொழுதுபோக்கு ஊடகத்துறையின் வருமானத்தில் தென்னிந்தியாவின் பங்களிப்பு மட்டும் 30 விழுக்காடு எனத் தெரிய வந்துள்ளது. மேலும், ஒப்பீட்டு அளவில் அதிகமான வெற்றிப் படங்களைத் தந்திருப்பதும் தென்னிந்திய திரையுலகம்தான்.
விமர்சன, வசூல் ரீதியில் இப்படங்கள் சாதித்ததை அடுத்து, அவற்றுள் பல, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மறுபதிப்பு செய்யப்படுகின்றன.
2021ல் இந்தியாவில் வெளியீடு கண்ட திரைப்படங்களில் சரிபாதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளி வந்தவையாகும்.
"மின்னிலக்க ஊடகமும் தென்னிந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதமானது 25% இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஓடிடி தளங்களின் வளர்ச்சியும் புயல் வேகத்தில் இருக்கும். படைப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்," என்று சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில்கூட்டமைப்பின் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கொரோனா நெருக்கடி வேளையில் வெளியீடு கண்ட இந்திப் படங்கள் பலவும் வசூலில் சாதிக்கவில்லை. வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.
"ஆனால் தமிழில் வெளியான விஜய்யின் 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்கள் சாதித்தன. இத்தனைக்கும் 'மாஸ்டர்' வெளியானபோது தமிழகத் திரையரங்குகளில் 50% இருக்கைகளை நிரப்ப மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது.
"மலையாளத்தில் ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கென்றே ஏராளமான படங்கள் தயாரிக்கப்பட்டன. நான்கு கோடி ரூபாயில் ஒரு படத்தை தயாரித்து, வெளியீட்டு உரிமையை குறைந்தபட்ச லாபத்துக்கு விற்பனை செய்யும் போக்கு அங்கு அதிகரித்துள்ளது.
"தென்னிந்திய பொழுதுபோக்குத் துறையின் வருமானத்தில் சுமார் 35% சின்னத்திரை மூலம் கிடைத்து வருகிறது. அதன் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் வருமான விகிதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

