'மன்மதலீலை' படத்தின் மூலம் இளையர்களைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார் இளம் நாயகி ஸ்ம்ருதி வெங்கட். கவர்ச்சியான பார்வை, நையாண்டி வசனங்கள், இளம் பெண்ணுக்கே உரிய சேட்டைகள் என ஸ்ம்ருதி தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளார்.
ஸ்ம்ருதி அச்சு அசல் தமிழ்ப்பெண். பெற்றோருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை.
பட்ட மேற்படிப்பு முடித்த பிறகுதான் சினிமா பக்கம் பார்வை திரும்பியதாம். முன்னதாக சில விளம்பரங்களில் தலைகாட்டி உள்ளார்.
"சிறு வயதில் இருந்தே சினிமா, கேமரா மீதான ஆர்வம் அதிகம். வீட்டில் சாதாரணமாக புகைப்படம் எடுத்தாலும் அதற்காக அழகாக 'போஸ்' கொடுப்பேன் என்று அம்மா அடிக்கடி சொல்வார். மூன்று வயதில் தொடங்கிய அந்த ஆர்வம்தான் இப்போது வெள்ளித்திரை நடிகையாக கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளது," என்று 'ஃபிளாஷ்பேக்' சென்று திரும்புகிறார் ஸ்ம்ருதி.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே 'முண்டாசுப்பட்டி' பட வாய்ப்பு தேடிவந்துள்ளது. ஆனால் பெற்றோர் தரப்பில் இதற்கு வரவேற்பு இல்லையாம். படிக்கும்போது முழுக்கவனமும் அதில்தான் இருக்க வேண்டும் என்று கறாராகக் கூறியுள்ளனர்.
சமர்த்துப் பெண்ணான ஸ்ம்ருதியும் அந்தப் படத்துக்கான நடிப்புத் தேர்வுக்குப் போகவில்லை. அதன் பிறகு உறவினர் ஒருவர் 'தடம்' படத்திற்கு புது நாயகியை படக்குழு தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
"இந்த முறை வீட்டில் பெரிய எதிர்ப்பு இல்லை. நடிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து அந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தனர். அதன் பிறகு வரிசையாகப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இப்போது, 'மாறன்', 'மன்மதலீலை' வரை எந்தச் சிக்கலும் இல்லாமல் என் திரைப்பயணம் போய்க்கொண்டிருக்கிறது.
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் என்ன அறிவுரை தந்தார்?
"விஜய் சார் தொடங்கி, தனுஷ், அசோக் செல்வன் வரை எல்லா நாயகர்களுமே அருமையாக நடிக்கக்கூடியவர்கள். அவர்கள் அனைவருமே எனக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
"தனுஷைப் பொறுத்தவரை, 'நாம் திரையில் காட்சி தரும் ஒவ்வொரு நொடியையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்பார். மற்றவர்களும் நல்ல அறிவுரைகள் தந்துள்ளனர். அதைவிட முக்கியம், முன்னணி நடிகர்கள் நம்முடன் பேசுவார்களா என்று சந்தேகப்பட்டேன். ஆனால் விஜய், தனுஷ் போன்ற பெரிய நட்சத்திரங்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் அன்பாகப் பேசினர். அதை நினைத்தால் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது," என்று சொல்லும் ஸ்ம்ருதியின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
விக்ரம் பிரபுவுடன் 'பகையே காத்திரு' படத்தில் மருத்துவ மாணவியாக நடிக்கிறார். வெற்றியுடன் ஒரு படம், அருள்நிதியுடன் 'தேஜாவு' உள்ளிட்ட படங்களில் ஸ்ம்ருதியைப் பார்க்க முடியும்.
'ஓ பேபி' படத்தில் சமந்தா ஏற்றிருந்த வேடம் ரொம்பப் பிடிக்கும். அதுதான் தமது கனவுக் கதாபாத்திரம் என்பவருக்கு, இளம் நாயகர்கள் அனைவரையும் பிடிக்குமாம்.
"பிடித்த நடிகர்களின் பட்டியல் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இப்போதைக்கு துருவ் விக்ரம்தான் என் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசை," என்கிறார் ஸ்ம்ருதி.
வெங்கட் பிரபு படத்தில் நடித்த அனுபவம் குறித்து?
"அதை மிக ஜாலியான உற்சாகம் நிறைந்த அனுபவம் என்பேன். வெங்கட் சார் எப்படிப்பட்டவர் என்றும் அவரது படங்கள் எப்படி இருக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
"படப்பிடிப்பின்போது ஏதாவது நகைச்சுவையைச் சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறியதில் மகிழ்ச்சி," என்கிறார் ஸ்ம்ருதி.
, :

