ஹன்சிகாவைப் போல் உற்சாகமான, திறமையான கதாநாயகி கிடைப்பது அரிது என்கிறார் இயக்குநர் மனோஜ் தாமோதரன். இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள 'பார்ட்னர்' படத்தில் ஹன்சிகாதான் நாயகி.
மும்பையில் இருந்த ஹன்சிகாவை நேரில் சந்தித்து கதையை விவரித்தாராம். சில சந்தேகங்களை எழுப்பியவர், அவற்றுக்கான விளக்கம் கிடைத்த நிமிடமே நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
"தாய்மொழியில் நடிப்பது எளிது. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து யதார்த்தமான, மிகையில்லா நடிப்பை வெளிப்படுத்த முடியும். பிறமொழிகளில் நடிக்கும்போது இந்த சௌகரியம் கிடைக்காது.
"ஆனால் ஹன்சிகாவைப் பொறுத்தவரையில் எந்த மொழியாக இருப்பினும் தமது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார். இதுதான் அவரது தனித்துவம்.
"படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே அவரிடம் ஒருவித உற்சாகம் காணப்படும். மிகவும் ஜாலியாகப் பணியாற்றுவார்.
"அவரைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த படக்குழுவுக்கு ஒருவிதப் புத்துணர்ச்சி கிடைத்துவிடும். இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதற்கேற்ப நடிப்பதில் அவர் கெட்டிக்காரர்," என்கிறார் இயக்குநர் மனோஜ்.
உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என அடிக்கடி சொல்வாராம் ஹன்சிகா.
மேலும், அனைவருடனும் நட்பாகப் பேசிப் பழகுவார் என்ற நல்ல பெயரையும் சம்பாதித்துள்ளார்.
"திரையுலகில் ஐம்பது படங்களுக்கும் மேல் நடித்துள்ள பெரிய நடிகை என்றபோதிலும் அவரிடம் வீண் பந்தா எதுவும் இருக்காது. அவருடைய உண்மையான சுபாவமே எளிமைதான்.
"தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்ததால்தான் இன்றளவும் அவரால் தாக்குப்பிடிக்க முடிறது.
"இந்தப் புதிய படமும் அதில் ஹன்சிகாவின் நடிப்பும் ரசிகர்களால் நிச்சயம் பேசப்படும். காரணம், இதில் கல்யாணி என்ற கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, அதற்காக கடுமையாக உழைத்துள்ளார்.
"ஒவ்வொரு காட்சியிலும் அவரது முழுத் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது," என்கிறார் மனோஜ்.
ஹன்சிகாவின் நகைச்சுவை உணர்வு தம்மை ஆச்சரியப்பட வைத்ததாகச் சொல்பவர், அவரது நகைச்சுவை உணர்வுக்கு ஏற்ற தீனியை இதுவரை தமிழ் இயக்குநர்கள் அளிக்கவில்லை என்கிறார்.
"நான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். அவரது நகைச்சுவையாகப் பேசுவது, நடிப்பது எல்லாமே கச்சிதமாக இருக்கும்.
"காலையில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, சின்னச்சின்ன தகவல்கள், சந்தேகங்களைக் கேட்பார். அவற்றுக்கான விளக்கங்களை அளித்தால்போதும், ஆறு பந்துகளும் சிக்ஸ்சருக்குப் பறந்த உற்சாகம் நமக்கும் ஏற்படும்," என்கிறார் மனோஜ்.
'மகா' திரைப்படம் விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில், ஹன்சிகா நடித்துள்ள மூன்று படங்கள் தமிழிலும் தெலுங்கிலுமாக வெளியீடு காண உள்ளது.
அதனால் ஹன்சிகா தரப்பில் உற்சாகம் நிலவுகிறது.
இதற்கிடையே, தனி நாயகியாக நடிப்பதற்கு அவர் முன்னுரிமை அளிக்கத் தொடங்கி உள்ளார்.
குறிப்பாக, பாலியல் வன்கொடுமை அல்லது பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விவகாரங்கள் என்றால் உடனே கால்ஷீட் தர அவர் தயாராகத் தகவல்.
"திரையுலகம் வேகமாக மாறி வருகிறது. இனி குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் ஆதிக்கம் மட்டுமே நீடிப்பது சாத்தியம் அல்ல.
"எல்லோருக்கும் போதுமான வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஒருவருடைய வாய்ப்பை மற்றொருவர் பறித்துவிட முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. காரணம், படைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது ஏராளமான இளையர்கள் புதுமையான கதைக்களங்களுடன் தங்கள் படைப்புகள் உருவாக்கி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசை," என்கிறார் ஹன்சிகா.
அறிமுக இயக்குநராக இருந்தாலும் வித்தியாசமான கதைக்களம் என்றால் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தர ஹன்சிகா தயார். கதை உள்ளவர்கள் அவரை நிச்சயமாக நம்பலாம் என்கிறது அவரது தரப்பு.

