கல்லூரி நாள்களில் பெரிய பாடகியாக வேண்டும் எனும் ஆசைதான் தமக்கு இருந்தது என்றும் காலம் தம்மை நடிகையாக மாற்றிவிட்டது என்றும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினர் கூறுவதை தம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் தனக்கு ஏற்ற ஒருவரைச் சந்திக்கும் வரை தாம் காத்திருக்கப் போவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"எந்தப் பக்கம் திரும்பினாலும், எப்போது திருமணம் என்ற கேள்வி தவறாமல் கேட்கப்படுகிறது. எனக்கு நானே இந்தக் கேள்வியை எழுப்பிக்கொள்கிறேன். இதுவரை, என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா? என்று யாரும் கேட்கவில்லை.
"குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுபவர்களுக்காக நான் அதைச் செய்ய விரும்பவில்லை.
"ஒருவருடன் வாழ்க்கையில் இணையப் போகிறோம் என்றால், அதற்கு தகுதியானவர்களாக இருவரும் இருக்க வேண்டும். எனது கணவர் என்பவர் மதிப்பு உள்ளவராக இருத்தல் அவசியம். அதுதான் முக்கியம் என நினைக்கிறேன்," என்கிறார் ஆண்ட்ரியா.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதுவதாகச் சொல்பவர், நட்சத்திர கலைஞராக வளர்ந்துவிட்ட போதிலும், நல்ல கதைகளுக்காக சிறிய வேடங்களில் சேதுபதி நடிப்பதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்கிறார்.
"எவ்வளவு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடித்து பெயரெடுக்கிறார் சேதுபதி. எனது படத்தில் அவர் அதுபோன்று நடித்திருப்பதற்கு நன்றி தெரிவித்து அவருக்கு கைபேசியில் குறுந்தகவல் அனுப்பினேன். ஆனால் அவர் அதையெல்லாம் எதிர்பார்ப்பதே இல்லை.
"முன்பு 'வடசென்னை' படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. அவருடன் தொடர்ந்து இணைந்து நடிக்க விரும்புகிறேன்.
"அதற்காகக் காத்திருப்பதாக அவரிடம் கூறியுள்ளேன்," என்று சொல்லும் ஆண்ட்ரியா, 'பிசாசு-2' படம் தம்மை திரையுலகப் பயணத்தின் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என்கிறார்.
அந்தப் படத்தின் இயக்குநர் மிஷ்கின் மீது தாம் வைத்திருந்த நம்பிக்கைதான் அப்படத்தில் தம்மை நடிக்க வைத்ததாகக் குறிப்பிடுபவர், மிஷ்கினிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.
கொரோனா நெருக்கடி வேளையில் மற்றவர்களைப் போலவே தாமும் வீட்டில் முடங்க நேரிட்டதாகவும் மீண்டும் திரையுலகம் இயங்கத் தொடங்கியதும் நடிப்பில் வெறித்தனமாக ஈடுபட்டதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
"உண்மைதான்... வெறியுடன்தான் காத்திருந்தேன். நடிப்பை அந்த அளவுக்கு நேசிக்கத் தொடங்கி இருப்பதை என்னால் உணர முடிகிறது.
"பெரிய இயக்குநர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரம் என்றால் ஆண்ட்ரியா தான் ஒப்பந்தமாகிறார் என்கிறார்கள்.
"இதற்கான காரணத்தை நான் எப்படிச் சொல்ல முடியும். இது இயக்குநர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. பொதுவாக திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகையின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு நடிகை என்று போய்க்கொண்டே இருப்பார்கள்.
"அப்படிப்பட்ட ஒரு துறையில் ஆண்ட்ரியாவால் தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்.
"அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர்கள் முடிவெடுப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என் மீதான எனது நம்பிக்கை மெல்ல அதிகரித்த வண்ணம் உள்ளது," என்கிறார் ஆண்ட்ரியா.
'பிசாசு-2' படத்துக்காக இவருக்குப் பல விருதுகள் கிடைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
"நானும் மிஷ்கினும் படப்பிடிப்பின்போது நிறைய சண்டைகள் போட்டிருக்கிறோம்.
"ஆனால் அவற்றை எல்லாம் கடந்து ஒருவர் மீது மற்றொருவர் நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.
"இந்த மோதல் தொழில் சார்ந்தது. தனிப்பட்ட வகையில் ஏதுமில்லை. எனது சந்தேகங்கள், கேள்விகளுக்கு உரிய பதில் கிடைத்துவிட்டால் நூறு விழுக்காட்டுக்கும் மேலாக உழைப்பேன். இல்லையெனில் மோதல்தான்.
"இவை அனைத்துக்குமே ஒரு படைப்பு மிகச் சிறப்பான தாக இருக்க வேண்டும் எனும் அக்கறைதான் காரணம். இதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்பதெல்லாம் இல்லை. சினிமாவவை முன்னைவிட அதிகம் நேசிக்கிறேன்," என்று சொல்லிச் சிரிக்கிறார் ஆண்ட்ரியா.
, :
ஆண்ட்ரியா

