ஹேமந்த் இயக்கத்தில் 'காரி' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் சசிகுமார்.
மண்ணின் வாசமும் மனிதனின் சாயலும் கொண்டதாக தமது படைப்பு இருக்க வேண்டும் என்கிறார் இந்த அறிமுக இயக்குநர்.
இதில் நகரத்தில் வசிக்கும் நாயகன் கிராமத்தைத் தேடி வருகிறான். அங்கு எதிர்கொள்ளும் அனுபவங்கள்தான் கதை என்றும் சொல்கிறார்.
"நாயகன் நகரத்தில்தான் இருக்கிறான். திடீரென ஒரு கிராமத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நம் வேர்களை இழந்து விட்டுத்தான் நாம் நகர்ப்புறங்களுக்கு வந்திருக்கிறோம்.
"நிஜமான கிராமம் இன்னமும் வெளியே வரவில்லை. இத்தகைய சூழலை திரையில் கதை சொல்லும் படமாக இது இருக்கும். புது மழை பெய்த மாதிரி வாசனையை படம் பார்க்கும்போதே ரசிகர்கள் உணர வேண்டும்.
"எனது கதை நாயகன் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து நல்ல மாற்றங்களுக்குக் காரணமாகிறான். ரத்தமும் சதையுமாக ஒரு கதையைச் சொல்ல முயற்சி எடுத்துள்ளேன். கிராமத்தில் உள்ளவர்கள், வெளியேறியவர்கள் எனப் பலரும் இந்தக் கதையில் வருவார்கள்.
"சசிகுமாரைப் பொறுத்தவரையில் படம் இயல்பாக நகர்வதற்குத் தேவையான நடிப்பை வழங்கி உள்ளார்.
"இந்தப் படத்தில் நாங்கள் எதையும் போதிக்கவில்லை. ஆனால் நல்ல விஷயங்களை முழக்கமாக இல்லாமல், விதைத்திருக்கிறோம். அப்படியான இடங்களில் சசிகுமார் நிதானமும் கூர்மையுமாக நடித்திருக்கிறார்.
"கதையின் நாயகி பார்வதி அருண். தெலுங்கிலும் மலையாளத்திலும் நடித்த அனுபவம் உள்ளவர். இப்போது தமிழில் அறிமுகமாகிறார். பல உயரங்களைத் தொடு வதற்கான திறமையும் உழைப்பும் அவரிடம் உள்ளது.
"கிங்ஸ்லி சென்னையிலிருந்து கிராமம் வரை சசிகுமாரைப் பின்தொடர்கிறார். இதுவரை நகைச்சுவை நடிகராக மட்டுமே அவரைப் பார்த்தவர்கள், இனி குணச்சித்திர பாத்திரங்களிலும் பார்க்க முடியும். இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனக்குள் இருக்கும் நடிகரை முழுமையாக வெளிப்படுத்தி உள்ளார்.
ஆடுகளம் நரேன், ஜேடி சக்கரவர்த்தி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சில உண்மை நிகழ்வுகளையும் அசல் மனிதர்களையும் இதில் நீங்கள் பார்க்க முடியும்," என்று எதிர்பார்ப்புகளை எகிறச் செய்கிறார் இயக்குநர் ஹேமந்த். 'காரி' படத்துக்கு இசை அமைப்பவர் டி.இமான். அனைத்துப் பாடல்களும் மிக இனிமையாக உள்ளனவாம். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய லட்சுமண்குமார் தயாரிக்கிறார்.

