'என் நடிப்பைக் காண ஆவலுடன் உள்ளேன்'

2 mins read
c8af4ce0-a97a-4c69-9f8e-6d4baa114561
'சாணிக் காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன். -

கீர்த்தி சுரே­ஷு­டன் இணைந்து நடித்­துள்ள 'சாணி காயி­தம்' படத்தில் தனது நடிப்பு எப்­படி உள்ளது என்­ப­தைக் காண தாமே ஆவலாக உள்­ள­தா­கக் கூறு­கி­றார் இயக்கு­நர் செல்­வ­ரா­க­வன்.

'பீஸ்ட்' படத்­தில் நடித்­துள்ள அவர், படம் இயக்­கு­வதைவிட நடிப்பது­தான் சிர­ம­மான விஷ­யம் என்­கி­றார். விஜய்யை வைத்து படம் இயக்­கும் வாய்ப்பு தமக்கு பல ஆண்டு­க­ளுக்கு முன்பே அமைந்­த­தா­க­வும் சில கார­ணங்­க­ளால் அது கைகூ­ட­வில்லை என்­றும் அண்­மைய பேட்டி­யில் மனம் திறந்­துள்­ளார் செல்வ ராகவன்.

"விஜய்­யும் நானும் முன்பே இணைந்­தி­ருக்க வேண்­டும். அதற்­கான பேச்­சு­வார்த்­தை­கள் பல­முறை நடந்­தன. ஆனால் ஒரு சில கார­ணங்­க­ளால் அது தள்­ளிப்­போ­னது.

"எல்­லாம் சரி­யாக அமைந்­தால் எதிர்­கா­லத்­தில் அவரை வைத்து நான் படம் இயக்க வாய்ப்­புண்டு. இது­கு­றித்து அவர்­தான் முடி­வெ­டுக்க வேண்­டும்.

"விஜய் மிக அற்­பு­த­மான மனி­தர், நடி­கர். மக்­கள் மத்­தி­யில் அவ­ருக்கு இந்த அள­வுக்கு வர­வேற்பு உள்­ளது என்­றால், அதற்கு அவ­ரது அர்ப்­ப­ணிப்­பும் உழைப்­பும்­தான் கார­ணம்.

"படப்­பி­டிப்­பின்­போது அவ­ரைப் போல் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­பட்ட நடி­கரை இது­வரை நான் பார்த்­த­தில்லை. அவ­ரு­டன் பேசி­ய­தை­விட, பார்த்து ரசித்­த­து­தான் அதி­கம்," என்­கி­றார் செல்­வ­ரா­க­வன்.

'சாணிக் காயி­தம்' படத்­தின் முதல்­தோற்­றச் சுவ­ரொட்­டியே ரசிகர்­களை அதி­கம் ஈர்த்­துள்­ளது. இதில் செல்வா என்ன கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார் என்­பது குறித்து அதிக தக­வல்­கள் இல்லை.

"இந்தப் படத்தில் எனது நடிப்பு எப்படி இருக்கும் என்று என்னிடமே கேட்கிறார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. நான் எப்படி நடித்திருக்கிறேன் என்று பார்க்க எனக்கே ஆவலாய் உள்ளது. 'சாணி காயிதம்' இயக்குநர் அருணும் நானும் சேர்ந்து தற்போது 'நானே வருவேன்' திரைப்படத்திலும் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். எனது நடிப்பு நன்றாக இருந்ததாக அருண் கூறினார். எனினும் படம் வெளிவந்த பிறகே எல்லாம் தெரியவரும்," என்று சொல்லும் செல்வராகவன், 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரு படங்களின் இரண்டாம் பாகங்களை படமாக்க தாம் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.

"இரு படங்களுமே வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை. தனுஷ் முன்பே சொன்னதுபோல், ஏற்கெனவே செய்ததைவிட சிறந்த படைப்பைத் தரவேண்டும். இல்லை யென்றால் பேசாமல் இருக்க வேண்டும். தனுஷ், கார்த்தி இருவரும் முன்வந்தால்தான் இரண்டாம் பாகங்கள் குறித்து யோசிக்க முடியும். காலம் கனியும் போது எல்லாம் நல்லவிதமாக நடக்கும்," என்கிறார் செல்வராகவன்.