'பீஸ்ட்' படம் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும், விஜய்யும் பூஜா ஹெக்டேவும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.
தாம் நடிக்கும் படங்கள் எந்த மொழியில் தயாராகின்றன என்பதைவிட, தமக்கான கதாபாத்திரமும் அது உருவாக்கப்பட்டுள்ள விதமும்தான் தமக்கு முக்கியம் என்கிறார் பூஜா.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய இரு படங்களைப் பார்த்தபிறகு, இயக்குநர் நெல்சன் மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டதாகவும் 'பீஸ்ட்' படத்தைப் பொறுத்தவரை தமது நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் சொல்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை நகைச்சுவையாக நடிப்பது மிகக் கடினமான விஷயம். அதிலும், எதிர்மறை நகைச்சுவை (பிளாக் காமெடி) என்பது ஒருசிலருக்கு மட்டுமே கைவந்த கலை.
"நெல்சனுக்கு இந்த எதிர்மறை நகைச்சுவை அத்துப்படி. அதனால் அவர் அமைக்கும் காட்சிகள் இயல்பாகவே கச்சிதமாகவே அமைகின்றன. அவருடைய பாத்திரப் படைப்புகள் அனைத்துமே சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் உள்ளன.
"ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையில்தான் கதாபாத்திரங்களை அவர் தேடிப் பிடிக்கிறார். அதைவிட முக்கியம், அவற்றுக்குப் பொருத்தமான நடிகர்களை அவர் நடிக்க வைக்கிறார்.
"அந்த நடிகர்களை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று ஒருமுறை அவரிடமே கேட்டேன். அதற்கு, 'அனைவரும் என்னுடைய நண்பர்கள்' என்றார்.
"நீண்ட காலமாக அவர்களைத் தமக்குத் தெரியும் என்றும் அவர்கள் தன் வாழ்வில் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பிட்டார்," என்று சொல்லும் பூஜா ஹெக்டேவும் நகைச்சுவை நடிப்பில் கெட்டிக்காரர்தான்.
தாம் இதுவரை ஏற்று நடித்துள்ள வெவ்வேறு கதாபாத்திரங்கள் தமக்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருப்பதாக குறிப்பிடுபவர், தமது திரைப்பயணம் இப்போது இருப்பது போன்றே சுமூகமாக தொடர்ந்து நீடிக்கும் என்று நம்புவதாகச் சொல்கிறார்.
"எனது திரை வாழ்க்கையை அவ்வளவு எளிதில் கட்டமைக்க முடியவில்லை. அதற்காக நிறைய சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறேன். தமிழில் நான் அறிமுகமான படம் 'முகமூடி'.
"பத்து ஆண்டுகளுக்கு முன் அந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு, 'மொஹஞ்சதாரோ' பட வாய்ப்பு கிடைத்தது. அதற்காக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியிருந்தது.
"அப்படியெனில், மூன்று ஆண்டுகளில் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க முடியும். அதிலும், எதிர்காலம் குறித்த எந்தவித நம்பிக்கையும் அப்போது என் மனதில் ஏற்படவில்லை. ஒரு வகையில் ரோலர் கோஸ்டர் ராட்டினம் போல் நாள்கள் ஏற்றமும் இறக்கமுமாக நகர்ந்தன. அந்தச் சமயத்தில் எனது குடும்பத்தார்தான் என்னைத் தாங்கிப்பிடித்தனர். தொடர்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்தனர்.
"அன்று என் குடும்பம் என்னை ஊக்கப்படுத்தி இருக்காவிட்டால், பூஜா என்ற நடிகை இருந்திருக்க வாய்ப்பிலை," என்று சொல்லும் பூஜா, திரைப்படங்களில் இடம்பெறக்கூடிய கதாபாத்திரங்களை இன்றைய இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சிறப்பான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்றும் சொல்கிறார்.
"பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும், அவர்களின் பிரதிநிதியாக திரைகளில் தோன்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
"கடினமாக உழைப்பவர்கள், அதற்கேற்ப பலன்களை அறுவடை செய்யலாம் என்பார்கள். கடின உழைப்பு அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் என்றும் என் வீட்டில் கூறுவதுண்டு.
"அது என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. கடினமாக உழைக்கும்போது நம் உள்ளமும் வலுவடையும். எதிர்மறை எண்ணங்களை எதிர்க்கத் தொடங்கிவிட்டால் வாழ்க்கையில் நாம் வெற்றி பெறலாம்.
"நான் சந்திக்கக்கூடிய இளம் பெண்களிடம் இதைத்தான் அறிவுரையாகச் சொல்கிறேன். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு உழைப்பும் முயற்சியும்தான் நமக்குத் தேவை.
"எனவே நம்பிக்கையுடன் உழையுங்கள். வெற்றி கிடைக்கும். அதற்கு நானே சிறந்த உதாரணம்," என்கிறார் பூஜா ஹெக்டே.
'பீஸ்ட்' படம் வசூல் ரீதியில் சாதித்துள்ளது என்பதால் பூஜா சத்தமின்றி தனது சம்பளத்தை சற்றே உயர்த்தி இருப்பதாகத் தகவல்.
தமிழில் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.

