நாயகியை மையப்படுத்தி உருவாகும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் அளவுக்கு திரையுலகில் தாம் இன்னும் வளர்ச்சி காணவில்லை என நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், திரையுலக வியாபாரச் சந்தையில் நாயகிகளுக்கான மதிப்பு இன்னும் அதிகரிக்கவில்லை என்பதே தாம் நாயகிகளை மையப்படுத்தும் கதைகளைத் தவிர்ப்பதற்கு காரணம் என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"அண்மைக் காலமாக நாயகியை மட்டுமே முன்னிலைப்படுத்தி உருவாகும் படங்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. இதை நானும் கவனித்தேன். அதுபோன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்றால், முதலில் நாம் அதற்குத் தகுதியுள்ள இடத்துக்கு வலுவாக வர வேண்டும். நாம் நடிக்கும் படங்கள் கடைக்கோடி ரசிகர்கள் வரை சென்றடையும் என நம்பிக்கை தேவை. இல்லையெனில் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்கள் சரிவர ஓடாது. நானே பார்த்தால்தான் உண்டு.
"அதேசமயம் வணிகப் படங்களில் நடிக்கும்போது, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே அவற்றை நன்றாக விளம்பரப்படுத்தும்.
"மேலும், வணிகப் படம் ஏராளமான ரசிகர்களிடம் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். எனினும் வணிகப் படங்களிலும்கூட எனக்கான கதாபாத்திரங்கள் நன்றாக அமைகின்றன.
"திரையுலகில் அறிமுகமான புதிதில் நிறைய நல்ல படங்களை இழந்திருக்கிறேன். அப்போது எனக்கு எது சரியான வழி என்று சொல்லிக் கொடுக்க யாருமில்லை.
"இப்போது ஓரளவு அனுபவம் வந்துவிட்டதால் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். பெரிய நாயகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன," என்கிறார் பிரியா பவானி சங்கர்.
தற்போது, அதர்வாவுடன் 'குருதி ஆட்டம்', சிம்புவுடன் 'பத்து தல', அருண் விஜய்யுடன் 'யானை' என நிறைய படங்களில் நடித்து வருபவர், அசோக் செல்வனுடன் இணைந்து நடித்துள்ள 'ஹாஸ்டல்' பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகச் சொல்கிறார்.
மலையாளத்தில் வெற்றிபெற்ற 'அடி கப்யாரே கூட்டாமணி' என்ற படத்தின் மறுபதிப்புதான் 'ஹாஸ்டல்'.
பொதுவாக மறுபதிப்பு படங்களில் நடிப்பதில் பிரியாவுக்கு அதிக ஆர்வம் இல்லையாம். எனினும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி இந்தப் படத்தை மாற்றி அமைத்துள்ளாராம் இயக்குநர்.
"அதனால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அசோக் செல்வன் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் இயக்குநர். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் மறுத்துவிட்டார். ஆனால் நான் விடவில்லை. நானே அவரைத் தொடர்புகொண்டு பேசி, நடிக்க வைத்தேன். நட்புக்காக அவர் இதைச் செய்தார்.
"இதற்கு முன்பு சில படங்களில் நானும் அவரும் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.
"இப்போது 'ஹாஸ்டல்' அந்த மனக்குறையைப் போக்கியுள்ளது. அவர் மிகவும் நல்ல மனிதர், நல்ல நண்பர்," என்று சொல்லும் பிரியா, இளம் நாயகிகள் அறிவுபூர்வமாகவும் யோசித்து படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.
அண்மையில் இணையம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, ஆபாசமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தார் பிரியா. அதுபோன்ற தருணங்களில் தயங்காமல் பதிலடி தர வேண்டும் என்கிறார்.
"அருவருப்பான பதிவுகளுக்கு பதில் அளிப்பதை தவிர்ப்போம். ஆனால் சில சமயங்களில் அதுபோன்ற கருத்துகளை எதிர்த்து பேச வேண்டும் என்று தோன்றும். எல்லா நேரத்திலும் நாம் அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது வாழ்க்கையில் உதவவும் செய்யாது," என்கிறார் பிரியா பவானி சங்கர்.

