எந்தத் துறையாக இருப்பினும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக குருவும் தேவை என்கிறார் நடிகர் ஜீவா.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய அவர், தமக்கு திரையுலகில் நல்ல குருநாதர்கள் அமைந்ததாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாசரும் கலந்துகொண்டார்.
"திரையுலகில் எனது முதல் குரு என்று சொன்னால் அது நாசர் அவர்கள்தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்குக் கற்பித்த அனைத்து சிறந்த பாடங்களுக்கும் நன்றி சார். இந்த இடத்தில் உங்களுக்கு நன்றி சொல்வதை ஒரு சிறந்த வாய்ப்பாக எண்ணுகிறேன்.
"திரு.நாசரை மேடையில் பார்த்ததும் நான் பேச நினைத்ததை மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். அவர்தான் எனக்கு வழிகாட்டி. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக நடித்திருந்தார். அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாகத்தான் அறிமுகமானேன்.
"ஒருநாள் படப்பிடிப்பின்போது அவர் என்னைப் பார்த்து 'தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவாயா?' என்று வினவியதோடு, நான் ஏன் நடிக்க வந்தேன் என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை," என்று சொல்லிச் சிரித்தார் ஜீவா.
கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கல்லூரி நிகழ்வில் பெருந்திரளான மாணவர்கள் பங்கேற்றுள்ளதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மாணவர்கள் எப்போதும் உத்வேகத்துடன் இருக்கவேண்டும் என்றும் பிறரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், வாழ்க்கைக்கான பல மேற்கோள்கள் தம்மிடம் உள்ளன என்றார்.
"உங்களிடம் பணம் இருக்கலாம். பல விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் உங்களிடம் இருக்கும் சிறந்த ஆற்றலைத்தான் நான் மதிப்புமிக்க விஷயமாகக் கருதுகிறேன். சிறந்த ஆற்றல் உள்ளவர்களால் எதையும் சாதிக்க முடியும்," என்றார் ஜீவா.
மாணவர்கள் தங்கள் ஆற்றலை ஆக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் எதையும் அழிப்பது நம் வேலையல்ல என்றும் குறிப்பிட்ட அவர், அனைவரும் நம்மை நேசிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல என்றார்.
"கிரிக்கெட் வீரர் சச்சின் சொல்வது போல், என்னுடைய சிறந்த படங்கள் இன்னும் வரவிருக்கின்றன. முந்தைய படங்களைவிட வரவிருக்கும் படங்களின் மூலம் உங்களை மேலும் மகிழ்விக்க உள்ளேன்," என்றார் ஜீவா.
இதையடுத்து பேசிய நடிகர் நாசர், ஜீவாவுடன் மேடையைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.
"அப்பாவும் மகனும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது போன்றுதான் உணர்கிறேன். ஜீவாவின் முதல் படத்தின் படப்பிடிப்பின்போது என்னைப் பார்க்க வந்தார். அவரை நான் வாழ்த்துவேன் என்று எதிர்பார்த்தார். ஆனால், நான் "தயாரிப்பாளரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவீர்களா?" என்று கேட்டேன். அவருக்கு கடும் அதிர்ச்சி.
"அதன் பின் அவருக்கு சில அறிவுரைகள் கூறினேன். சில புத்தகங்களைப் படிக்கச் சொன்னேன். அவர் அது எதையும் மதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அனைத்தையும் செய்தார். இன்று அவர் ஒரு பெரிய நடிகனாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார் நாசர்.
, :

