அடுத்த மே மாதம் தொடங்கி, இந்த ஆண்டு இறுதி வரை பல முக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகினர் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.
பல்வேறு பிரச்சினைகளால் வெளியீடு காணாமல் இருந்த படங்களும் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணப்பிரச்சினை, கருத்து வேறுபாடு, கதை திருட்டு உள்ளிட்ட காரணங்களால் முன்னணி நடிகர்களின் படங்கள்கூட திரைகாண்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்திருப்பதால், இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் திரையுலகத்தினர் மும்முரமாக உள்ளனர்.
உதயநிதி நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி', ஜி.வி.பிரகாசின் 'ஐங்கரன்', செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக் காயிதம்', சிவகார்த்திகேயனின் 'டான்', சுந்தர்.சி யின் 'பட்டாம் பூச்சி', ஆர்.கே.சுரேசின் 'விசித்திரன்' ஆகிய படங்கள் வரிசையாக வெளியீடு காண உள்ளன.
கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்', அருண் விஜய்யின் 'யானை', ஆர்.ஜே.பாலாஜியின் 'வீட்ல விசேஷம்', விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' ஆகிய படங்கள் ஜூன் மாதமும் மாதவன் இயக்கி நடித்துள்ள 'ராக்கெட்ரி', தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்', லிங்குசாமி இயக்கிய 'தி வாரியர்' ஆகிய படங்கள் ஜூலை மாதமும் வெளியீடு காண உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடித்துள்ள 20வது படமும் சமந்தாவின் 'யசோதா' படமும் ஆகஸ்டு மாதம் திரைகாண்பது உறுதி எனக் கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

