நடிகை என்ற முறையில் தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை நன்கு அனுபவித்து நடிப்பதுதான் தமது வழக்கம் என்கிறார் ரெஜினா கெஸாண்ட்ரா.
தம்மைப் பெண்ணியவாதி என்று கூறிக்கொள்ளும் நிலையில், கவர்ச்சியாக நடிப்பதில் தமக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்றும் அது தம்மை பாதிக்காது என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் ரெஜினா.
அண்மையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமாடிய பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. எனினும் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி இருப்பது குறித்து ரெஜினாவை ரசிகர்கள் பலர் குறைகூறி உள்ளனர்.
இ்து குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
"தொடர்ந்து நிறையப் படங்களில் நடனம் ஆட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அல்லது பாடல்களில் நடனமாடுவது ஒரு வகையான பிம்பத்தை உருவாக்கும் என்பதால் தற்போது அவற்றைத் தேர்வு செய்வதில்லை. கவர்ச்சியான பாடலாக இருந்தாலும் கொண்டாட்டமான பாடலாக இருந்தாலும் இது எதுவும் ஒரு பெண்ணியவாதியான என் சித்தாந்தத்தைப் பாதிப்பதில்லை," என்று தமது பேட்டியில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்ததாம். அதன் பிறகு ஒற்றைப் பாடலுக்கு நடனமாடக் கேட்டு பலரும் தம்மை அணுகியதாகச் சொல்கிறார்.
"ஒரு படத்தில் நடனம் ஆடினேன் என்றால், அதேபோல் ஏன் இன்னொரு படத்திலும் அதைச் செய்ய முடியாது என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிம்பத்தை உருவாக்குகிறது என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.
"எந்த விஷயத்தைச் செய்தால் என் எதிர்காலம் நன்றாக இருக்குமோ அதைச் செய்வேன். சிரஞ்சீவியுடன் நடனம் ஆடுவது எனது விருப்பப்பட்டியலில் இருந்த ஒரு விஷயம். அதனால் அதைச் செய்தேன்," என்கிறார் ரெஜினா.
ஒரு பாடலுக்காக கவர்ச்சியாக நடிப்பதும் குத்தாட்டம் போடுவதும் தவறு இல்லை என்று குறிப்பிடுபவர், இதன் காரணமாக எழும் விமர்சனங்கள் குறித்து தாம் கவலைப்படவில்லை என்கிறார்.
"பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதற்கெல்லாம் நான் கோபப்படுவது இல்லை. அதேபோல் மோசமான விமர்சனங்கள் குறித்தும் கவலைப்படுவதில்லை.
"நடிகை என்று ஆனபிறகு, நாம் எதைச் செய்தாலும் சிலர் கேள்விகளைக் கேட்கத்தான் செய்வார்கள். அவர்களுடன் மோதுவதால் எந்தப் பயனும் இல்லை.
"எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்கத் தொடங்கும்போது, நமக்குப் பதில் இல்லாமல் போய்விடும்.
"ஒரு பாடலுக்கு நடனமாடுவது, வலிமையான பெண்ணாக நடிப்பது அல்லது திரையில் கொலை செய்வது என ஒவ்வொரு காட்சியையும் ஒரு நடிகையாக ரசிப்பேன்.
"இது அனைத்தும் கலையின் ஒரு பகுதி. ஒரு நடிகையாக, நான் பல விஷயங்களைச் செய்யப் போகிறேன் என்று என்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்," என்கிறார் ரெஜினா.
தாம் நடித்த சில படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை என ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டுவதை தாம் நன்கு அறிந்துள்ளதாக குறிப்பிடுபவர், வசூல் சரியாக இல்லை என்பதால் ஒரு படைப்பை தரமற்றது என்று ஒதுக்கிவிட முடியாது என்கிறார்.
தமிழில் தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் ரெஜினா, மேலும் சவாலான கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார்.

