ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா இணைந்து நடித்துள்ள 'செல்ஃபி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, படக்குழுவினர் பங்கேற்ற வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு, படத்தின் இயக்குநருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தொழில் மீதான பக்தி அதிகம் இருந்தது என்று குறிப்பிட்டார்.
"செல்ஃபி' என்ற தலைப்பை வைத்து படம் இயக்கப் போவதாக இயக்குநர் மதிமாறன் என்னிடம் ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப் படத்தை நான் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடக்கத்திலேயே ஏற்பட்டது. வெறும் 38 நாள்களில் இப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததற்கு மதிமாறனை நிறைய பாராட்டலாம். ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. 'செல்ஃபி' படத்தில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. அவர் இன்னும் உயரிய இடத்துக்குப் போகவேண்டும்.
"தம்பி குணாநிதியும் திறமையாக நடித்திருக்கிறார். முதல் படம் என்று சொல்லமுடியாத அளவிற்கு நடித்திருக்கிறார்.
"கௌதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் நடிக்கவேண்டும் என்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்ட உடனேயே ஒப்புக்கொண்டார். மதிமாறனையும் வெகுவாகப் பாராட்டினார்.
"இயக்குநர் மதிமாறன் அடுத்து நான் தயாரிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக இப்போதே அவருக்கு பத்து லட்சம் முன்பணத்தைக் கொடுக்கப் போகிறேன்," என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்தபோது, படக் குழுவினர் ஆரவாரம் செய்தனர்.

