இரு நல்ல உள்ளங்களின் வாழ்க்கையை விவரிக்கும் படைப்பாக உருவாகி வருகிறது 'நதி' திரைப்படம். அறிமுக இயக்குநர்
தாமரைச்செல்வன் இயக்குகிறார்.
சாம் ஜோன்ஸ் நாயகனாகவும் 'கயல்' ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இளையர்களைக் கவரும் வகையில்
இந்தப் படத்தை உருவாக்குவதாக கூறுகிறார் இயக்குநர்.
"'நதி' என்று தலைப்பு வைக்க காரணம் உள்ளது. நதி தூய்மையான இடத்தில் உற்பத்தியாகி கடலை நோக்கி வந்தடைய வேண்டும். வழியில் பல மேடு பள்ளங்களைச் சந்திக்கும். சில சமயம் தேங்கி நிற்கும்.
"ஆனாலும் ஒரு நதி கடலை அடைவதுதான் அதன் இலக்காக இருக்க முடியும். அதுபோல என்னுடைய கதையில் வரும் இரண்டு தூய்மையான கதாபாத்திரங்கள் சமூகத்தால் சில பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அதைக் கடந்து அவர்கள் தங்கள் இலக்கை அடைகிறார்களா என்பதுதான் படத்தோட ஒரு வரிக் கதை. அதை மனதில் கொண்டுதான் இந்தத் தலைப்பை வைத்தோம்," என்கிறார் தாமரைச்செல்வன்.
அண்மைக்காலமாக திகில் படங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெளிவருவதாகக் குறிப்பிடுபவர், இந்தக் காரணத்தால் இளையர்களைக் கவர வேண்டும் என்ற முடிவுடன் இந்தக் கதையை தயார் செய்ததாகச் சொல்கிறார்.
"இந்தப் படம் இன்றைய இளையர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். எனது கதையுடன் சில உண்மைச் சம்பவங்களையும் சினிமாவுக்கான மொழியில் மாற்றிச் சொல்லி இருக்கிறோம்," என்று சொல்லும் தாமரைச்
செல்வன், இந்தப் படத்தின் நாயகி பாத்திரத்துக்கு ஆனந்தியைவிட வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என்கிறார்.
ஆனந்தியிடம் கதை சொல்ல சென்றபோது, படப்பிடிப்பு முடிந்து அவர் வீடு திரும்ப இரவு பத்து மணி ஆகிவிட்டதாம். அதன் பிறகு, இவர் சுமார் ஒன்றரை மணி நேரம் கதையை விவரித்திருக்கிறார். அதைப் பொறுமையாக கேட்ட பிறகே நடிக்க சம்மதித்தாராம்.
"என்னுடைய நாயகன் சாம் ஜோன்ஸ் புதுமுகம் அல்ல. 'ஏமாளி', 'லிசா' போன்ற படங்களில் நடித்தவர். அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். நான் வைத்திருந்த கதையும் அவர் எதிர்பார்த்திருந்த கதையும் பொருத்தமாக இருந்ததால் அவரே நாயகனாக நடிப்பது என்பது முடிவானது. ஏற்கெனவே நாயகனாக நடித்திருந்தாலும், இந்தப் படம் அவரை வணிகப் படங்களின் நாயகனாக அடையாளப்படுத்தும். அதற்காக தன்னை முழுமையாகத் தயார் செய்த பிறகே படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
"உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், படத்தின் ஒரு பகுதியில் இறகுப் பந்து விளையாட்டு தொடர்பான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்காக முறைப்படி பயிற்சி மேற்கொண்டார். இந்தப் படம் வெளியான பிறகு தமிழ் சினிமா இயக்குநர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பும்.
"வளர்ந்து வரும் நாயகன் என்பதால்,
நாயகியாக நடிப்பவர் தெரிந்த முகமாக இருக்க வேண்டும் என விரும்பினோம். சில இளம் நாயகிகள் நடிக்க ஆர்வம் காட்டிய போதும், ஆனந்தி பொருத்தமான தேர்வாக
இருப்பார் எனத் தோன்றியது.
"அந்த சமயத்தில்தான் ஆனந்தியின் கால்ஷீட் இரண்டு மாதங்களுக்கு இருக்கும் தகவல் கிடைத்தது. நாங்களும் அவரைத் தொடர்புகொண்டோம். இந்தப் படத்தில் அவர் நடிக்
கிறார் என்றால் அதற்கு கதைதான் காரணம். அவர் எவ்வாறு நடிப்பார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
"இதுவரை அவர் நடித்த அனைத்து படங்களும் தனி முத்திரை பதித்தவர். பொதுவாக படப்பிடிப்பின்போது, வசனங்களில் யாராவது தவறு செய்துவிட்டால் பின்னணிக் குரல் பதிவின்போது சமாளிக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் ஆனந்தி அதற்கு நேர்மாறாக படப்பிடிப்பின்போதே காட்சிகளை உள்வாங்கி என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு நடிப்பார். அதுதான் அவரது தனித்துவம் என்பேன்.
"இப்படிச் செய்யுங்கள், அப்படி நடிக்கலாம் என்றெல்லாம் ஆனந்தியிடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரே இயக்குநரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்," என்று ஆனந்திக்காக பெரிய பாராட்டுப் பத்திரத்தை வாசிக்கிறார் இயக்குநர் தாமரைச்செல்வன்.

