நடிகைகள் நயன்தாரா, சமந்தா.
ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு படத்தில் தாமும் இருக்க வேண்டும் என விரும்பியதால்தான் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.
மேலும், நயன்தாராவைப் போல் விசுவாசமான, கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நடிகையை தாம் இதுவரை பார்த்ததில்லை என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தப் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆராய்ச்சி எதையும் மேற்கொள்ளவில்லை. தினந்தோறும் பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகளில்
சிக்கிக்கொண்டு பரபரப்பாக வாழ்ந்து வருகிறோம். அதிலிருந்து விடுபட்டு பிரச்சினைகளை மறந்து சிரித்து படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்காக உருவான படம் இது. எனவே, நானும் இதில் இடம்பெற விரும்பினேன்.
"விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நாள்களாக காத்திருந்தேன். அந்த காத்திருப்பு வீண் போகவில்லை.
"அனிருத்தைப் பொறுத்தவரை தமிழ்த் திரையுலகில் மற்றொரு இசை மேதை எனலாம். அவரது இசை தனிச்சிறப்பு வாய்ந்தது. அவர் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன.
"நயன்தாரா எத்தகையதொரு கடின உழைப்பாளி என்பதை நேரில் பார்த்தேன். அவரது வெற்றிக்கு இந்த உழைப்பும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் மீதான விசுவாசமும்தான் காரணம் என நம்புகிறேன்," என்கிறார் சமந்தா.
இதற்கிடையே, 'காத்து
வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா, சமந்தா இருவருமே சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளனர்.
இருப்பினும், சமந்தாவின் குரல் எடுபட்ட அளவுக்கு, நயன்தாராவின் குரல் அவரது கதாபாத்திரத்துக்கு பொறுத்தமாக அமையவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
"இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டும் என்பதில் முடிவாக இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, திரையில் அவர் அசத்தி உள்ளார்," என்கிறார் விக்னேஷ் சிவன்.

