கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் ஒற்றைப்பாடல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை எழுதி பாடியுள்ளார் கமல். பாடல் வரிகள் மூலம் மத்திய அரசை அவர் மறைமுகமாக குத்திக்காட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திங்களில் நடித்துள்ளனர். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம், 'பிக்பாஸ்' ஷிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி, மைனா நந்தினி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளனர்.
பாடலுக்கான இசை தம்மை வெகுவாக கவர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், அனிருத்தை பெரிதும் பாராட்டி உள்ளார். 'பத்தல பத்தல' என்று தொடங்கும் 'விக்ரம்' படப்பாடலில், தாம் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி, கழுத்தில் சுற்றிக்கொண்டு இளையர்களுடன் குத்தாட்டம் போடுகிறார் கமல்.
'விக்ரம்' படம் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக, மே 15ஆம் தேதி முன்னோட்டக் காட்சித்தொகுப்பை வெளியிடுகின்றனர்.
இதற்கிடையே, இந்தப் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை படக்குழுவினர் இதுவரை உறுதி செய்யவில்லை.
எனினும், படப்பிடிப்புத்தளத்தில் கமலும் சூர்யாவும் சந்தித்துப் பேசும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதனால் சூர்யா இப்படத்தில் நடித்திருப்பது உறுதி என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

