எது உண்மைக்காதல் என்பதை அலசும் விதமாக உருவாகிறது 'காலங்களில் அவள் வசந்தம்' படம்.
'டாணாக்காரன்' படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த அஞ்சலி நாயர் நாயகியாகவும் அறிமுக நாயகன் கவுசிக்கும் நடிக்கும் படம் இது.
"திருமணத்துக்குமுன் காதலிப்பது, திருமணத்துக்குப் பிறகு காதலிப்பது ஆகியவற்றில் எது உண்மைக்காதல் என்ற விவாதம் நீடித்து வருகிறது. இதை நகைச்சுவையும் காதலும் கலந்து சொல்கிறோம். மேலும் இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றியபோது நெடுநல்வாடை பட வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்துக் கொண்டிருந்தபோதே 'டாணாக்காரன்' படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன். எனினும் கொரோனா விவகாரத்தால் தமிழ்ப் படங்களில் நடிக்க முடியாமல் போனது," என்கிறார் அஞ்சலி.
சினேகா, பிரசன்னாவுக்கு திருமணமாகிப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பத்தாண்டுகளாக திருமண வாழ்க்கை என்பது எளிதல்ல என்று குறிப்பிட்டு உள்ளார். "எங்களுக்குள் பல சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன. நான் அளித்த வாக்குறுதிகள் பலவற்றை மீறியுள்ளேன். சில சமயங்களில் உங்கள் (பிரசன்னா) இதயத்தை உடைத்துள்ளேன். இருப்பினும், என்னிடம் தொடர்ந்து அன்புகாட்டுகிறீர்கள். உங்கள் அன்பால் மீண்டும் மீண்டும் என்னை வெல்கிறீர்கள். அன்பைவிட தூய்மையான ஒன்று இந்த உலகில் இல்லை," என்று நெகிழ்ந்துள்ளார் சினேகா.
ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள அவரது 50வது படமான 'மஹா' ஜூன் 10ஆம் தேதி வெளியீடு காணும் என அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக இப்படத்தை மே 27ஆம் தேதி வெளியிடவிருந்தனர். பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்ட பிறகும் 'மஹா' ரசிகர்களுக்கு தரிசனம் தரவில்லை. எனினும் இம்முறை அறிவித்த தேதியில் படம் திரைகாணும் எனப் படக்குழு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து, தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'தளபதி 66' படத்திலும் 'அரபிக்குத்து' போன்ற பாடல் இடம்பெறுகிறது. இத்தகவலை இசையமைப்பாளர் தமன் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அனிருத் எப்படி விஜய் படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தாரோ, அதே போன்ற பாடல்களை தம்மால் வழங்க முடியம் என்றும் தமன் கூறியுள்ளார்.
'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட வரிகளை நீக்கக் கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.