தமக்கு எந்தவிதமான பட்டப்பெயரோ, அடைமொழியோ தேவை இல்லை என்கிறார் திரிஷா.
தற்போது 'தி ரோட்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருப்பவர், அதற்கான படப்பிடிப்புக்காக மதுரையில் முகாமிட்டுள்ளார். இதற்கு முன்பு 'கில்லி' படத்தில் நடித்தபோதுதான் மதுரையில் அதிக நாள்கள் தங்கி இருந்தாராம். அதன் பிறகு இப்போதுதான் மதுரையில் தொடர்ந்து தங்கி உள்ளார்.
இந்தப் படத்தின் கதையை பல கதாநாயகிகளிடம் கூறியுள்ளார் இயக்குநர் அருண் வசீகரன். கதை நன்றாக இருப்பதாகச் சொன்னாலும், நடிக்கத் தயங்கினார்களாம்.
"அதற்குக் காரணம் உள்ளது. இது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படம்தான். அதேசமயம் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த சபீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகியைப் போல் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ளதால் பல நாயகிகள் நடிக்க தயங்கினர். அதன் பிறகு திரிஷாவை அணுகினோம்.
"திரிஷாவின் கால்ஷீட் எளிதில் கிடைத்துவிடாது என்பது அனைவருக்கும் தெரியும். முதல் முறை தொடர்புகொண்டபோது, கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கிய நேரம் அது. திரிஷா நடித்து அரைகுறையாக நின்றுபோன படங்களின் படப்பிடிப்புகள் வரிசையாக நடைபெற்று வந்தன. அதனால்தான் அவர் எங்கள் படத்தில் நடிக்க மறுத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
"எனவே மீண்டும் சந்தித்து முழுக் கதையையும் காட்சிகளையும் விவரிக்கும் அச்சிடப்பட்ட பிரதியை அளித்தேன். படித்த பிறகு அவரே தொடர்புகொண்டு ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு, அருமையாக இருப்பதாகப் பாராட்டினார். அதன் பிறகு அவர் காட்டிய ஆர்வமும் அர்ப்பணிப்பும் என்னை வியக்க வைத்தன," என்கிறார் அருண் வசீகரன்.
சென்னையில் தொடங்கி மதுரையில் முடிகிறது இப்படத்தின் கதை. சென்னைப் பெண்ணான திரிஷா திடீரென மதுரைக்குப் போகிறார். அங்கு அவருக்கு என்ன நேர்ந்தது, எதற்காக பழிவாங்கும் படலத்தில் ஈடுபடுகிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான விடைகளின் தொகுப்புதான் இந்தப் படமாம்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஏதேனும் ஒரு வலியும் அதற்கான காரணமும் இருக்கும். அப்படி தனது வலிக்கான காரணத்தை தேடிச் செல்கிறார் திரிஷா.
அவரது எளிமையும் அவரது நட்பான அணுகுமுறையும் தம்மை வியப்படைய வைத்ததாகக் கூறுகிறார் இயக்குநர்.
"அது மட்டுமல்ல, அவரிடம் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. புகழுக்கும் ஆசைப்படுவதில்லை. ஒருநாள் இந்தப் படத்தின் தலைப்பில் அவருக்கு ஒரு பட்டம் கொடுக்க விரும்புவதாகக் கூறினேன். 'தென்னிந்திய அரசி' உள்ளிட்ட சில பட்டப் பெயர்களைக் குறிப்பிட்டபோது, எதுவும் வேண்டாம் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
"ரசிகர்களும் மக்களும்தான் பட்டம் கொடுக்க வேண்டும். அந்த வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். படைப்பாளிகள் அதைச் செய்யக்கூடாது. இதனால் படத்தின் தரம் பாதிக்கப்படும் என்றார் திரிஷா. அதைக்கேட்டு வியந்தேன், என்கிறார் அருண் வசீகரன்.

