கொரோனா நெருக்கடி வேளையில் கையில் பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டதாகக் கூறியுள்ளார் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சரிகா.
கையில் இருந்த பணம் முழுவதும் கரைந்துபோனதால் மேடை நாடகங்களில் நடித்து சம்பாதித்து நிலைமையைச் சமாளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
"மேடை நாடகங்களில் நடித்தபோது நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் சம்பளமாகக் கிடைத்தது. எனவே மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
"அறுபது வயதைக் கடந்துவிட்ட நடிகைகளுக்கு எப்போதாவதுதான் முக்கிய கதாபாத்திரங்கள் அமைகின்றன. அவர்கள் மீது 'அம்மா கதாபாத்திரங்கள்' திணிக்கப்படுகின்றன. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. நான் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணம். மீண்டும் நடிக்க வந்தபோது, என்னை விட மூன்று வயது குறைவான நாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன்," என்கிறார் சரிகா.
தனது மகள்கள் ஷ்ருதியும் அக்ஷராவும் திரையுலகில் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், சரிகா ஏன் இரண்டாயிரம் ரூபாய்க்காக நடிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். அவரது நிலை பரிதாபகரமானது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

