உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் 'ஆக்ஷன்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் பரத். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.
உரிய அனுமதி பெற்றிருந்தாலும், படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மக்கள், கணிசமான தொகை தந்தால்தான் படப்பிடிப்பை நடத்த விடுவோம் என்று தகராறு செய்துள்ளனர்.
வேறு வழியின்றி படத் தயாரிப்புத் தரப்பு பணத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் இதை அறிந்த மற்றொரு தரப்பினர், தங்களுக்கும் பணம் தர வேண்டும் என்று கேட்க, தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த அத்தரப்பினர் படப்பிடிப்பு வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் மீது கற்களை வீசி தாக்குதலும் நடத்தி உள்ளனர். இனிமேலும் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் படக் குழுவினர் இந்தியா திரும்ப முடிவு செய்திருக்கிறார்களாம்.
கடந்த 2018ஆம் ஆண்டு தாய்லாந்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அங்குள்ள சுற்றுலாத்தலமான தாம் லுங் என்ற குகைக்குள் சிறுவர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 பேரும் அவர்களின் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டனர்.
ஒன்பது நாள்களுக்குப் பிறகு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் போராட்டத்துக்கு இடையில் மீட்கப்பட்டனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ஆக்ஷன் படம் உருவாகி வருகிறது.

