'சாணிக் காயிதம்' படத்துக்கு விமர்சன, வசூல் ரீதியில் கிடைத்துள்ள வரவேற்பு கீர்த்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இது போதாது என்று, தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள 'சர்காரு வாரி பாட்டா' படம், வெளியீடு கண்ட முதல் நாளன்றே ஐம்பது கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வெளியீடு கண்ட திரையரங்கு ஒன்றில் மகேஷ் பாபு ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு 35 அடி உயர பதாகை வைத்துள்ளனர்.
"தெலுங்கு ரசிகர்கள் தங்கள் அபிமான கதாநாயகர்களுக்கு மட்டுமே இப்படி பதாகை வைப்பது வழக்கம். ஆனால் கீர்த்திக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது எனில், அது உண்மையிலேயே பெரிய விஷயம்.
"ரசிகர்கள் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதால் அதை பதாகை மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். அதிலும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்துள்ள படத்துக்காக பதாகை வைத்திருப்பது ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகத்தினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது," என்கிறார்கள் தெலுங்கு திரையுலகப் பிரமுகர்கள்.
இதற்கிடையே, கவர்ச்சியாக நடிப்பது குறித்து கீர்த்தி தெரிவித்த கருத்துக்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அண்மைய பேட்டி ஒன்றில் தன் தாயும் நடிகையுமான மேனகா கவர்ச்சி காட்டாமல் நடித்து நல்ல நடிகை எனப் பெயரெடுத்துள்ளதாகவும் இதை நினைத்து தாம் பெருமைப்படுவதாகவும் கூறியிருந்தார் கீர்த்தி.
இதை வைத்து சமூக ஊடகங்களில் சிலர் கடுமையாக கருத்து தெரிவித்தனர். இதனால் தாம் வருத்தம் அடைந்ததாகவும் தமது கருத்தை சிலர் திரித்து வெளியிட்டுள்ளதாகவும் கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
"முதலில் கவர்ச்சி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த கவர்ச்சி என்றால் அழகு. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் அந்த வார்த்தைக்கு வேறு அர்த்தத்தைக் கூறுகின்றனர்.
"அதேசமயம், உடல் அழகை அதிகம் வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை நான் ஏற்பதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு, அவ்வளவுதான்," என்கிறார் கீர்த்தி.
சில மாதங்களுக்கு முன்னர் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்திருப்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்புகிறார்களாம். பழைய தோற்றம்தான் நன்றாக உள்ளது என்றும் கூறுகிறார்களாம்.
ஆனால் உடல் இளைத்து ஒல்லியாக இருப்பதுதான் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வசதியாக உள்ளது என்கிறார்.
"இப்போது என்னால் பல வகையான ஆடைகளை அணிய முடிகிறது. அதற்கு இந்த ஒல்லியான உடல்வாகுதான் காரணம். இதற்கு முன்பு இது சாத்தியமில்லை. நான் சற்று குண்டாக இருப்பதுதான் தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். பல ஆண்டுகள் என்னை அதே தோற்றத்தில் பார்த்ததால் அவர்களுக்கு அது பழகிவிட்டது. ஆனால், திரையுலகில் நீடிக்கவும் நல்ல கதாபாத்திரங்கள் அமையவும் இந்த ஒல்லியான உடல்வாகு அவசியம் எனக் கருதுகிறேன்.
"ஒரே சமயத்தில் பல படங்களில் நடிப்பது எனது மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடிக்கும்போது சில சமயங்களில் அலுப்பு தட்டிவிடும். அடுத்தடுத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும்போது ஜாலியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது," என்கிறார் கீர்த்தி.
தனக்கு பதாகை வைக்கப்பட்டது குறித்து ஊடகங்கள் மூலமாகத்தான் முதலில் தெரியவந்தது என்று குறிப்பிடுபவர், இந்தத் தகவல் தமக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்கிறார்.
"உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஒருசில நடிகைகளுக்குத்தான் தெலுங்கு ரசிகர்கள் இவ்வாறு பதாகை வைத்து பெருமைப்படுத்தி உள்ளனர். அந்தப் பட்டியலில் நானும் இடம்பெற்றுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி," என்கிறார் கீர்த்தி.

