கமல்ஹாசன் நடிப்பில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'தசாவதாரம்'. இதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் 'தசாவதாரம்' போன்ற இன்னொரு படைப்பை உருவாக்கவே முடியாது என சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"கமல் எப்போதும் கடின உழைப்பை நம்பக்கூடியவர். 'தசாவதாரம்' படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார்.
"சில தினங்களுக்கு முன் திடீரென என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். 'தசாவதாரம்' வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேட்டவர், அடுத்த இரண்டு மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.
"கடந்த சில ஆண்டுகளாகவே என்னையும் கமலையும் பார்ப்பவர்கள் 'தசாவதாரம்' இரண்டாம் பாகம் குறித்து கேட்கிறார்கள். ஆனால் நானும் கமலும் நினைத்தால்கூட அதுபோன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே 'தசாவதாரம்-2' உருவாக வாய்ப்பே இல்லை," என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஓடிடி தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்ட அவர், ஓடிடி தளங்களால் திரையுலகம் பாதிக்கப்படாது என்றார்.
"முன்பு தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
"சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓடிடி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்," என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
அவரது நடிப்பில் உருவான 'கூகுள் குட்டப்பா' படம் அண்மையில் வெளியானது. இதில் 'பிக்பாஸ்' புகழ் தர்ஷன், லாஸ்லியா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

