எப்போதுமே நல்ல விமர்சனங்களைப் பெற வேண்டும் எனும் நோக்கத்துடன் மட்டும் படங்களில் நடிக்க முடியாது என்றும் நல்ல வருமானத்துக்காகவும் நடிக்க வேண்டியுள்ளது என்றும் சொல்கிறார் நடிகர் சிபிராஜ்.
சினிமா ரசிகர்கள் இப்போது வெகுவாக மாறிவிட்டதாகச் சொல்பவர், இப்போதெல்லாம் சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது குறித்து திரையுலகத்தினர் யோசிக்கவோ, தயங்கவோ தேவை இல்லை என்கிறார்.
கொரோனா ஏற்படுத்தி உள்ள தாக்கத்துக்குப் பின்னர் கதைகளை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சில நடிகர்கள் கூறுகின்றனர். படப்பிடிப்புகளை நடத்தும் விதம், வியாபார அணுகுமுறை எல்லாம் மாறிவிட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், சிபிராஜ் கொரோனா நெருக்கடி தம்மை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்கிறார். தம்மிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார்.
"என்னைப் பொறுத்தவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முயற்சிகளில் ஈடுபட்டேன். அதற்கு நான் நடித்த 'லீ' திரைப்படமே நல்ல ஆதாரம். எப்போதுமே ஒருவித தனித்துவத்துடன் கூடிய பல்வேறு முயற்சிகளை நான் வரவேற்றுள்ளேன்.
"அப்போதெல்லாம் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சிகளைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, புது முயற்சிகளுக்காக அவர்களைத் தயார்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
"அண்மைக்காலமாக பல்வேறு மொழிகளில் வித்தியாசமான கதைக்களங்களுடன் உருவாகும் படங்களை ரசிகர்கள் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் அமைந்துள்ளன," என்கிறார் சிபிராஜ்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நடித்த 'ரங்கா' அண்மையில் வெளியீடு கண்டது. படம் முன்பே தயாராகிவிட்டாலும், கொரோனா விவகாரத்தால் வெளியிட முடியாமல் போனதாம்.
ஓடிடி தளங்களில் வெளியிடலாம் என பலரும் ஆலோசனைக் கூறியுள்ளனர். ஆனால், சிபியும் தயாரிப்பாளர் தரப்பும் திரையரங்கில்தான் இப்படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.
"இது திகில் படம் என்பதால் திரையரங்கில் பார்த்தால்தான் ரசிகர்களிடம் தாக்கம் ஏற்படும். வெளியீடு தள்ளிப்போவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கவலைப்படாமல் காத்திருந்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தப் படம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் உருவாகி உள்ளது. குறிப்பாக, குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.
"கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'நாய்கள் ஜாக்கிரதை' படத்துக்கு குழந்தைகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு எங்கு சென்றாலும், குழந்தைகள் என் மீது அன்பை பொழிகின்றனர். எனவே, எனது படங்களில் குழந்தைகளை மகிழ்விக்கவும் ஏதேனும் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
"அந்த வகையில், 'ரங்கா' படத்திலும் குழந்தைகளுக்காக சிறிய நகைச்சுவைப் பகுதி இடம்பெற்றுள்ளது," என்று சொல்லும் சிபிராஜ், அடுத்து நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இதற்காக, தெலுங்கு மொழியில் பேச கற்று வருகிறாராம்.
"பாண்டியன் ஆதிமூலம் இயக்கும் இந்த திகில் படம் தமிழிலும் வெளியீடு காணும். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இடம்பெறாமலேயே உருவாகி உள்ளது. நிச்சயமாக அனைத்துத் தரப்பினரையும் பயப்பட வைக்கும்.
"சில சமயங்களில் முழுநீள வணிகப் படங்களிலும் நடிக்க வேண்டிய கட்டாயம் நடிகர்களுக்கு ஏற்படும். தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த முடியாது. நல்ல சம்பாத்தியம் என்பதை மனதிற் கொண்டு சில கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல," என்று வெளிப்படையாகப் பேசுகிறார் சிபிராஜ்.
ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களின் தலைப்பை புதுப்படங்களுக்குச் சூட்டுவதில் தவறேதும் இல்லை என்பது இவரது கருத்து. ரசிகர்கள் நன்கு அறிந்த அந்த தலைப்புகளை மீண்டும் பயன்படுத்தும்போது, அது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது என்கிறார்.
"'சத்யா', 'வால்டர்', 'ரங்கா' என நான் நடித்த படங்களுக்கும் பழைய படத் தலைப்புகளைப் பயன்படுத்தி உள்ளோம். 'சத்யா' என்ற தலைப்பை மட்டும் நான்தான் பரிந்துரைத்தேன். நான் கமலின் தீவிர ரசிகன். அவர் நடித்த 'சத்யா' படத்தைப் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன். அதனால் அந்தத் தலைப்பை வைக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன்," என்கிறார் சிபி.

