கதாநாயகிகளை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 'அன்னபூரணி' என்ற புதுப்படம் உருவாகி வருகிறது.
இதில் நடிகைகள் லாஸ்லியா, லிஜோமோல் ஆகிய இருவரும் கதை நாயகிகளாக நடித்துள்ளனர். இது பெண்ணியம் பேசும் படம் என்கிறார் இயக்குநர் லயோனல் ஜோஸ்வா.
இவர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பள்ளியில் ரஷ்யன் பியானோ படிப்பை முடித்துவிட்டு அவரிடமே பணிபுரிந்தவர். திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படப்பிடிப்பைத் தொடங்கிய வேகத்தில் மொத்தம் 19 நாள்களிலேயே அனைத்துக் காட்சிகளையும் படமாக்கிவிட்டாராம்.
"எல்லாருடைய உழைப்பினால்தான் இது சாத்தியமானது. நான் மட்டுமே காரணமல்ல. முழுப் படப்பிடிப்பையும் சென்னையில்தான் நடத்தினோம். காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பணிகள் நடக்கும்," என்கிறார் லயோனல் ஜோஸ்வா.
இன்றைய நவீன உலகில் குடும்பங்களில் எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதை அலசுகிறது 'அன்னபூரணி' படம். அனா, பூரணி ஆகிய இரு பெண்களின் கதை இது.
குடும்ப அமைப்புக்குள் இருக்கும் பூரணிக்கும் அத்தகைய அமைப்பே தேவையில்லை என்று சொல்லும் அனாவுக்குமான பயணமே இந்தப் படம். 'அனா'வாக லாஸ்லியா, பூரணியாக லிஜோமோல் நடித்துள்ளனர்.
"குடும்பம்தான் பெண்ணைச் சிறைப்படுத்துகிறது என்பார் தந்தை பெரியார். பெரியாரின் சிந்தனைகளைப் படித்த பிறகு, தோழர் கவிதா கிருஷ்ணனின் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் என் மனதில் இந்தக் கதை உருவானது.
"இந்தக் குடும்ப அமைப்பானது ஓர் ஆணுக்குப் பாதுகாப்பாகவும் ஒரு பெண்ணுக்கு எதிரானதாகவும் உள்ளது. குடும்பம் எனும் நிறுவனம் பெண்கள் மீதான வன்முறைக்களமாக மாறி உள்ளது.
இதையெல்லாம் வெறும் தகவலாக, பாடமாக இல்லாமல் நல்லதொரு கதையை வைத்து விவரித்துள்ளேன்.
"ஒரு நல்ல கதையானது அதற்குத் தேவைப்படும் அம்சங்களைத் தானே அமைத்துக் கொள்ளும் என்பார்கள். மராத்தியில் ஒளிப்பதிவாளராக இருந்த என் நண்பர் ஹெக்டர் முதல்முறையாக தமிழில் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
"இதில் கலை இயக்குநர் அமரனின் உழைப்புக்குப் பெரிய பங்கு உண்டு. பாடல்கள் யுகபாரதி. அவரது வசனங்கள் இந்தக் கதையை உயிரோட்டமானதாக மாற்றி உள்ளது," என்று சொல்லும் லயோனல் ஜோஸ்வா, வசனக் காட்சிகளை 18 நாள்களிலும் பாடல்களை ஒரே நாளிலும் படமாக்கி உள்ளார்.
'ஜெய்பீம்' படத்துக்குப் பிறகு பல கதைகள் தேடிவந்த போதும் லிஜோமோல் அனைத்தையும் ஏற்கவில்லை. 'அன்னபூரணி' படத்தின் கதை பிடித்துப்போனதால் உடனே ஒப்புக்கொண்டாராம். கதைப்படி, ஒரு காட்சியில் லிஜோமோல் கார் ஓட்ட வேண்டி இருந்தது. ஆனால் அவருக்கு கார் ஓட்டிப் பழக்கமில்லை. இருப்பினும் இந்தப் படத்துக்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார்.
லாஸ்லியாவைப் பொறுத்தவரை வசதியான குடும்பத்துப் பெண் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இந்தக் கதாபாத்திரம்தான் கதைக்கு திருப்புமுனையாக இருக்குமாம்.
"நிறைய குடும்பம் சார்ந்த அரசியலை விவாதிக்க வைக்கும். ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்துள்ளார். இரண்டு நாயகிகள் உள்ள படம் என்பதால் பல்வேறு சுவாரசியங்கள் உள்ளன.
"இரண்டு நாயகிகளை வைத்துப் படமெடுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன என்று அனுபவம் வாய்ந்த நண்பர்கள் சிலர் என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு. அவற்றை எல்லாம் கேட்ட பின்னர் மனதுக்குள் ஒருவித அச்சம் இருந்தது.
"நல்லவேளையாக லிஜோமோலும் லாஸ்லியாவும் தோழிகளைப் போல் பழகினர். மேலும் ஒருவர் சம்பந்தப்பட்ட காட்சிக்கு மற்றொருவர் உதவி செய்தது பெரிய விஷயம்.
"ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைய உதவிகரமாகவும் இருந்தது பாராட்டுக்குரியது," என்கிறார் இயக்குநர் லயோனல் ஜோஸ்வா.
'அன்னபூரணி' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியீடு காணும் என அப்படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

