தமிழில் 'ட்ரிகர்', 'அகிலன்', 'இறக்கை முளைத்தேன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தான்யா ரவிச்சந்திரன்.
தன் தாத்தா, பழம்பெரும் நடிகர் காலஞ்சென்ற ரவிச்சந்திரன் உயிரோடு இருந்திருந்தால் தமது வளர்ச்சியைப் பாராட்டி இருப்பார் என்கிறார் இவர்.
நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், சில படங்களில் கிராமத்துப்பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து பாராட்டுகளைக் குவித்துள்ளார் தான்யா.
"திரையுலகில் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஐந்து படங்களில் நடித்துள்ளேன். இது குறைவான எண்ணிக்கை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இடைப்பட்ட காலத்தில் கொரோனா தொற்றுப்பரவல் நம்மை இரண்டு ஆண்டுகள் முடக்கிப்போட்டதை மறந்துவிடுகிறார்கள். எனவே அதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் மூன்று ஆண்டுகளில் ஐந்து படங்கள் என்பது பெரிய அதிர்ஷ்டம் என்பேன்.
"அது மட்டுமல்ல, இரண்டு படங்களில் நடித்து முடித்ததும், முதுகலைப்படிப்பை முடிக்கும்வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று வீட்டில் கண்டிப்புடன் கூறிவிட்டனர். அதனால், 'மனிதவள மேலாண்மை' தொடர்பான படிப்பை முடிக்கும்வரை கோடம்பாக்கம் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க வில்லை," என்கிறார் தான்யா.
நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது திரையுலகில் தமக்கான அடையாளமாக இருப்பதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிடுபவர், தாத்தாவின் கடின உழைப்பையும் நேரம் தவறாமையையும் தாம் பின்பற்றுவதாகக் கூறுகிறார்.
"அவர் உயிரோடு இருந்தபோது, 'சினிமாவில் நடிக்க விருப்பமா' என என்னைக் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆசை இருந்தாலும் அவரிடம் கூறியதில்லை. அவருடன் படப்பிடிப்புகளைப் பார்க்க வும் போனதில்லை.
"ஆனால், வீட்டுக்கு வருபவர்களிடம், 'என் பேத்தி... என்னுடைய தேவதை' என்று மறக்காமல் சொல்வார். அவரைப் பொறுத்தவரை நான் தேவதை. ஒரு நடிகையாக என்னைப் பார்க்க அவர் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது," என்று தன் தாத்தாவின் பெருமைகளைச் சொல்லி நெகிழ்கிறார் தான்யா.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே தாத்தா ரவிச்சந்திரன் காலமாகிவிட்டதாக நினைவுகூர்பவர், வீட்டில் இருந்து படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்னர் பூசை அறையில் உள்ள தாத்தாவின் படத்தைத் தொட்டு வணங்குவாராம்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குப் படங்களிலும் கவனம் செலுத்தி வருபவர், 'ராஜா விக்ரமார்கா' படத்தில் கார்த்திகேயாவுடன் ('வலிமை' பட வில்லன்) இணைந்து நடித்துள்ளார்.
இந்தப் படம் வசூலில் ஓரளவு சாதித்ததை அடுத்து, தெலுங்கில் புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். தெலுங்கு இணையத்தொடரில் கிராமத்துப்பெண்ணாக நடிக்க உள்ளார் தான்யா.
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நகர்ப்புறப் பகுதிகளில்தான் என்றாலும் கிராமங்கள் எனக்கு அந்நியம் கிடையாது. விடுமுறைக்காக கொடைக்கானல், ஊட்டி என்று பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார் அப்பா. அங்கு தங்கி இருக்கும்போது அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்வோம்.
"கிராம மக்களுடன் அப்பா மணிக்கணக்கில் பேசும்போது நானும் அருகில் இருந்து கவனிப்பேன். கிராமத்து உணவு வகைகளைச் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
"இப்படி கிராமத்து அனுபவங்கள் நிறைய உள்ளன. அவை மறக்க முடியாதவை," என்று சொல்லும் தான்யா, தமிழில் கிருத்திகா உதயநிதி இயக்கும் 'பேப்பர் போட்' இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார்.
'நெஞ்சுக்கு நீதி' படத்தில் ஊடகவியலாளராக நடித்திருப்பவர், அடுத்து 'இறக்கை முளைத்தேன்' படத்தில் சிபிஐ புலன் விசாரணை அதிகாரியாக அசத்தி உள்ளார்.
"படத்துக்குப் படம் மாறுபட்ட பாத்திரங்க ளில் நடிக்க விரும்புகிறேன். அதேசமயம் வணிக அம்சங்கள் உள்ள படங்களைத் தவிர்க்க முடியாது.
"இரண்டு வகைப் படங்களிலும் நடித்தால்தான் திரையுலகில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியும்," என்று விவகமாகப் பேசுகிறார் தான்யா.