தவறான சிகிச்சையால் கணவரையும் விதியின் விளையாட்டால் ஒரே மகளையும் இழந்து, அவர்களின் நினைவால் வாடுவதாகக் கூறுகிறார் முன்னாள் நடிகை 'டிஸ்கோ' சாந்தி.
முப்பது வயதைக் கடந்த சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. மற்றவர்களுக்காக சிறு குறிப்பு.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்து இளையர்களை தனது அழகாலும் நடனத்தாலும் கவர்ந்தவர் 'சில்க்' ஸ்மிதா. அவருக்கு இணையாக கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் வாங்கியவர் டிஸ்கோ சாந்தி.
வெள்ளை மனசு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், பின்னர் 'ஊமை விழிகள்' திரைப்படத்தில் நடனமாடிய 'ராத்திரி நேரத்து பூசையில்' என்ற பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சாந்தி.
இறுதியாக 1996ஆம் ஆண்டு 'துறைமுகம்' எனும் படத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டில் ஸ்ரீஹரி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பிறகு திரைத்துறையில் இருந்து விலகிய டிஸ்கோ சாந்தி, தனது கணவர், குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு அவரது கணவர் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.
"தவறான சிகிச்சைதான் என் கணவர் உயிரிழக்கக் காரணம். மருத்துவர்கள் அவருக்கு போட்ட ஊசியினால் ரத்த வாந்தி எடுத்து அநியாயமாக என் கணவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்தபோது தவறு நடந்துவிட்டது மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சினர். இழப்பீட்டுத் தொகை தருவதாகவும் கூறினர்.
"இப்போது எனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறேன். பிறந்து நான்கு மாதங்களான போது என் மகள் இறந்துவிட்டாள். மகளின் நினைவாக அவளது பெயரில் அறக்கட்டளை நிறுவி அதை வழிநடத்தி வந்தார் என் கணவர். இப்போது அவரும் இறந்துவிட்ட நிலையில், எனது இரு மகன்களுடன் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன்.
"அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் சில நல்ல கதாபாத்திரங்கள் எனக்கு அமைந்தன. எனினும் கவர்ச்சி நடிகையாகவே அறியப்படுகிறேன்.
"என் வாழ்வில் நான் எதிர்கொண்ட சோதனைகள், வேதனைகள், இழப்புகள் இன்னொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது. கணவரையும் மகளையும் மறக்கமுடியாமல் ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் கடந்து போகிறது," என்கிறார் டிஸ்கோ சாந்தி.
இவரது தங்கை லலித குமாரியும் நடிகைதான். இவர்களது தந்தை சி.எல்.ஆனந்தன் அந்நாள்களில் முன்னணி நடிகராக பெயர் பெற்றவர். டிஸ்கோ சாந்தியின் பேட்டி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.